சென்னை, மே.11: எதிரிக்கட்சியாக இல்லாமல்; ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும், முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கும் தலைவர் எங்கள் உயிரான மு.க.ஸ்டாலினுக்கும், பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லோவற்றிற்கும் மேல் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான நன்றி.
தலைவரின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் – மக்கள் மன்றத்திலும் – சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்னது போல் ‘எதிரிக்கட்சியா இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்’. மக்களுக்கும் – அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்த பொறுப்புக்கு நான் 100 சதவீதம் உண்மையா இருப்பேன்; கடுமையாக உழைப்பேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
