கர்நாடகாவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று திரும்பியபோது 31 சென்னை மாணவர்களுடன் பள்ளத்தில் பாய்ந்த ஆம்னி பஸ்: வாலாஜா அருகே டயர் வெடித்து அதிகாலை விபத்து

 

 

வாலாஜா: கர்நாடகாவில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று திரும்பியபோது, வாலாஜா அருகே அதிகாலை டயர் வெடித்து ஆம்னி பஸ் 25 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்து குடியிருப்பு பகுதியில் பாய்ந்தது. இதில் சென்னையை சேர்ந்த 31 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை அடுத்த தாம்பரம் மற்றும், பூந்தமல்லி ஆகிய பகுதிகளிலிருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் 2 சொகுசு ஆம்னி பஸ்களில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த 7ம் தேதி சென்றனர்‌. அங்கு 2 நாட்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று முடிவடைந்த பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களூரிலிருந்து சென்னை செல்வதற்காக 2 ஆம்னி பஸ்கள் வந்தது. அதில் ஒரு பஸ்சை கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை பகுதியை சேர்ந்த டிரைவர் கணேசன் (31) என்பவர் ஓட்டி வந்தார். அதேபோல் கிளீனர் நந்தகுமார் (20) என்பவர் உடன் இருந்தார்.

இந்த பஸ்சில் 31 மாணவ, மாணவிகள் இருந்துள்ளனர். நேற்று அதிகாலை ஆம்னி பஸ் வாலாஜா அடுத்த பாலாறு அணைக்கட்டு சாலை மேம்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையின் எதிர் திசையில் சென்று, பக்கவாட்டு இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்து அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதில் பயணம் செய்த 31 மாணவர்கள் மற்றும் டிரைவர், கிளீனர் என 33 பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டின் அருகில் பஸ் நின்றது, அதிர்ஷ்டவசமாக அதன் மீதும் மோதவில்லை. இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான பஸ்சில் இருந்து 31 மாணவ, மாணவிகள் வேறு ஓரு பஸ்சில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான பஸ்சை மீட்டனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: