புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை சங்கரதாஸ் சாமிகள் நகரை சேர்ந்த சுந்தரகுமார மணிகண்டன் என்பவர், தனது நண்பருடன் கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி முத்தியால்பேட்டை மகாத்மாகாந்தி வீதியிலுள்ள பிரியாணி அன் கோ என்ற உணவகத்துக்கு சாப்பிட சென்றுள்ளார். அங்கு அவர் பிரியாணி மற்றும் சைட்டிஷ் ஆர்டர் செய்து உரிய பணம் செலுத்தி சாப்பிட்டபோது, அவருக்கு பரிமாறப்பட்ட உணவில் இறந்த பூச்சி (ஈ) இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து உணவக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு நிர்வாகம் சரியான பதிலளிக்கவில்லை. இதனால், உணவை சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் வழங்கவில்லை.
அந்த உணவு விற்பனைக்கோ, உட்கொள்வதற்கோ தகுதியற்றது. உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தை சரிவர பின்பற்றாமல் உணகத்தை நடத்தி வருகின்றனர். இதனால் பிரியாணி அன் கோ நிர்வாகம் முறையற்ற வணிகம் செய்ததாகவும், சேவை குறைபாடு இருப்பதாகவும் கூறி, புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் பிரியாணி அன் கோ நிறுவனத்துக்கு ஆணையத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை அவர்கள் பெற்றுக் கொண்டும் ஆணையத்தின் முன் ஆஜராகி எவ்வித பதில் விளக்கமும் அளிக்கவில்லை. இந்த வழக்கை புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
ஆவணங்களை பரிசீலிக்கப்பட்டு, பிரியாணி அன் கோ வழங்கிய உணவில் பூச்சி (ஈ) இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான, தரமான உணவை வழங்கவில்லை என்பதற்காகவும், பிரியாணி அன் கோ நிறுவனத்தின் மீது சேவை குறைபாடு மற்றும் உணவு தரமின்மை காரணத்துக்காக புகார்தாரர் சுந்தரகுமார மணிகண்டனுக்கு, நஷ்டஈடாக ரூ.10 ஆயிரமும், மேற்கொண்டு வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்க வேண்டும். பிரியாணி அன் கோ சேவை குறைபாடோ, உணவு தரமின்மையோ, எதிர்காலத்தில் ஏற்படாமலிருக்கவும், ஒரு நற்செய்கையின் அடிப்படையில் புகார்தாரருக்கு, ஒவ்வொரு வாரமும் பிரதி ஞாயிற்றுக் கிழமை 2 பிளேட் சிக்கன் பிரியாணி 5 வாரங்களுக்கு (10 பிளேட் பிரியாணி) விலையில்லாமல் வழங்கிட உத்தரவிட்டுள்ளது.
