முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் ஒலித்தது ஏன்? டெல்லியில் திருமாவளவன் பேட்டி

 

சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றார் அப்போது முதலில் வந்தே மாதரம் பாடலும் அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து ஆகியவை பாடப்பட்டது. இது மிகப் பெரிய சர்ச்சையாக இருந்தது. இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டு அரசு விழாவில் முதலில் தமிழ்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும். ஆனால் இன்று வந்தேமாதரம் பாடல் முதலில் ஒலிக்கப்பட்டது. இதில் வந்தேமாதரம் பாடல் என்பது ஒரு சாரர் சார்ந்தது என்பதால் இதனை கடந்த தி.மு.க அரசு வந்தேமாதரம் பாடலை இசைக்க மாட்டோம் என கூறியது. மத சார்பற்ற அரசு அமைய வேண்டும், மீண்டும் ஒரு தேர்தல் தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக இடதுசாரிகள் மற்றும் விசிக தமிழக வெற்றிக்கழகத்தை ஆதரித்தது. அதனை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி அமைக்கப்பட்டது.

விஜய் முதல்வராக பதவியேற்று கொண்டுள்ளார். இருப்பினும் பதவியேற்ப்பின் போது வந்தேமாதரம் பாடல் கவனக்குறைவாக ஒலிக்கப்பட்டதா, ஆளுநர் விருப்பப்படி ஒலிபரப்ப்பட்டதா, அதிகாரிகளால் போடப்பட்டதா, இந்த விவகாரம் முதலமைச்சர் விஜய்யின் கவனத்துக்கு வந்ததா? எனவே இதற்கு முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். அதேபோன்று இனிமேல் அரசு விழாவில். இதுபோன்ற நடைமுறைதான் கடைப்பிக்கப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு, கடன் இருக்கிறது என்பது உண்மை. ஆனால் அது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் தான் இருக்கிறது. 15வது நிதி குழு நிர்ணயித்து கொடுக்கிற வரம்புக்குள் தான் கடன் சுமை இருக்கிறது. கடந்த அரசு வட்டி, அசல் ஆகியவற்றை செலுத்தியிருக்கிறார்கள் என்றும் திமுக தலைவர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் பயணித்தோம் அந்த கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் ஒன்றரை கோடி வாக்குகளை அளித்திருக்கிறார்கள். அதிமுகவுக்கும் ஒரு கோடிக்கு மேலான வாக்குகளை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் அவ்வாறு இருக்கையில் கிட்டதட்ட 60 சதவீத வாக்குகளை மக்கள் விஜய்க்கு எதிராகவே அளித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் யாருக்கும் வெற்றியும் இல்லை யாருக்கும் தோல்வியும் இல்லை என்பதை புரிந்து கொண்டு கவனமாக செயல்பட வேண்டும்.

 

Related Stories: