சேலம்: தமிழக முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய், நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கான விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இவ்விழா தொடங்கும் போதும், நிறைவு பெறும் போதும் வந்தே மாதரம், தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் கடைசியாக பாடப்பட்டதற்கு மாநிலம் முழுவதும் தமிழ் ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, முதல்வர் பதவியேற்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, சேலத்தில் திமுகவினர் மொட்டையடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். சேலம் மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் பகுதி ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் மாசிலாதுரை (42) மற்றும் இளைஞரணி அமைப்பாளர் ஜிந்தா என்கிற இளங்கோ (36) ஆகியோர் மொட்டையடித்துக் கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், `திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒருபோதும் தமிழ் மொழியை விட்டுக்கொடுக்காமல், முக்கியத்துவம் அளித்து பணியாற்றினார். ஆனால், தற்போது பதவியேற்பு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு பகிரங்கமாக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,’ என்றனர்.
