சென்னை: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கத் தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்றார். அப்போது, மூன்று திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். மேலும், 9 அமைச்சர்களுடன் பதவியேற்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதியும் நடைபெற்றது. இதில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளது. அதேநேரம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மட்டும் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டியது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு முதலில் மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக் கோரினர். மேலும், 2 வாரங்களில் தாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கக் கால அவகாசம் வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து, 3 முறை ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய். ஆனால், ஆட்சியமைக்கத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களைக் கொடுத்தால்தான் ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று தெரிவித்துக் கோரிக்கையை நிராகரித்தார் ஆளுநர்.
இதற்கிடையே, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்களிடம் விஜய் முதல்வராக ஆதரவு அளிக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்துப் பெறப்பட்டது. இந்நிலையில், தவெக ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்களைப் பெறத் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கோரியது. அதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு அதிகமாக ஆதரவைப் பெற்றது.
ஆட்சி அமைப்பதற்குப் போதுமான ஆதரவு கிடைத்ததையடுத்து நேற்று முன்தினம் நான்காவது முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய். அதைத் தொடர்ந்து விஜய்யின் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரல் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தார். அதன் அடிப்படையில் நேற்று காலை 10 மணிக்கு விஜய் முதல்வராகப் பதவியேற்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
பதவியேற்பு விழா நடைபெறும் இடத்திற்கு விஜய் நேற்று காலை 8.45 மணிக்கு வந்தார். அப்போது அவர் வெள்ளை நிறச் சட்டையும் கருப்பு நிறச் காற்சட்டையும் அணிந்து வந்தார். நேரு விளையாட்டு அரங்க வாயிலில் காத்திருந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் விஜய்க்குப் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றனர். பிறகு நேரு விளையாட்டு அரங்கில் உள்ள காத்திருப்பு அறையில் விஜய் சுமார் ஒரு மணிநேரம் காத்திருந்தார். அந்த இடைவெளியில் விஜய் கருப்பு நிறக் கோட் அணிந்துகொண்டார். தொடர்ந்து, 10 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்தார். அப்போது ஆளுநருக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து வழங்கியும் விஜய் வரவேற்றார். அதைத் தொடர்ந்து, பதவியேற்பு விழா மேடைக்கு விஜய் மற்றும் ராகுல்காந்தி வந்தனர். 10.10 மணிக்கு ஆளுநர் மேடை ஏறினார். அப்போது, விஜய் அமைச்சர்களை ஆளுநருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
பதவியேற்பு விழாவின் தொடக்கமாக வந்தே மாதரம், தேசிய கீதம் அதை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆளுநர் அர்லேகர், முதல்வராக விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதற்காக ஆளுநர், ‘ஐ’ (நான்) என்று ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணத்தை தொடங்கி வைத்ததும், விஜய் தமிழில், சி.ஜோசப் விஜய் ஆகிய நான்… என்று தொடங்கி ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழி ஏற்றார். அதுபோல ரகசியக் காப்பு உறுதிமொழியையும் ஆளுநர் தொடங்கி வைக்க, விஜய் ரகசியக் காப்பு உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு மற்றும் கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். இறுதியாக வந்தே மாதரம் பாடல் மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி முடிவுற்றது.
பின்னர், ஆளுநருடன் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். விஜய்யை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தபோது, வரும் 13ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு நிகழ்ச்சியில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, விசிக சார்பில் வன்னியரசு, பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்திரராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல், காங்கிரஸ் ஆகிய கட்சியின் நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
