சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசின் அமைச்சரவையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பிரதிநிதிக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய அரசின் பதவியேற்பு விழாவின்போது, இந்த அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்கிற உறுதியைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த உறுதியுடன், அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மாநில உரிமையைக் காக்கும் அரசாகவும் செயல்பட வாழ்த்துகிறேன்.
அமைச்சரவை உருவாக்கத்தில் அனைத்துச் சமூகத்தினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அதில் ஒரு மிகப்பெரிய இடைவெளி இருப்பதை உணர முடிகிறது. குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கூட இந்த அரசின் முதல் அமைச்சரவையில் இடம்பெறாதது மிகுந்த கவலைக்குரியது. ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்து தரப்பு மக்களின் குரலும் அதிகார மையத்தில் ஒலிக்க வேண்டியது அவசியமாகும். இனி அது சரிசெய்யப்படுவதாக இருந்தாலும், புதிய அரசில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் அமைச்சரவைப் பிரதிநிதித்துவத்தை அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், முதல் அமைச்சரவை பதவி ஏற்பில் அச்சமூகத்திற்குப் பிரதிநிதித்துவம் இல்லாதது கவலையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
தற்போது இந்தியா முழுவதும் முஸ்லிம் சமூகம் பல்வேறு அரசியல் காரணங்களால் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழல் நிலவுகிறது. இத்தகைய காலகட்டத்தில், சமூக நீதியைப் போற்றும் தமிழகத்திலும் அதே போன்றதொரு புறக்கணிப்பு தொடர்வது ஆரோக்கியமானதல்ல. சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், அவர்களின் அரசியல் பங்கேற்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமை இந்த அரசுக்கு உள்ளது. வரும் காலத்தில் அதனைச் சரி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
