புது டெல்லி: நடந்து முடிந்த அசாம், மேற்கு வங்க பேரவை தேர்தல்களில் பாஜவும், அதன் கூட்டணி கட்சிகளும் எஸ்.சி மற்றும் பழங்குடியினர் தனித் தொகுதிகளை பெருமளவு கைப்பற்றி உள்ளன. அசாம் பேரவை தேர்தலில் எஸ்.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் பாஜ ஐந்து இடங்களையும், அதன் கூட்டணி கட்சியான ஏஜிபி 3 இடங்களையும் வென்றன. காங்கிரசுக்கு ஒரே ஒரு இடம் மட்டும் கிடைத்தது. பழங்குடியினருக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் தேஜ கூட்டணி கைப்பற்றியது. இதில் 13 தொகுதிகளை பாஜவும், ஐந்து தொகுதிகளை அதன் கூட்டணிக் கட்சியான போடோலாந்து மக்கள் முன்னணியும் கைப்பற்றின. ஒரு பொதுத் தொகுதியை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்றொரு கூட்டணிக் கட்சியான ஏஜிபி கட்சியின் பழங்குடியின வேட்பாளர் வென்றுள்ளார்.
போடோலாந்து மக்கள் முன்னணி போன்ற கூட்டணிக் கட்சிகள் மூலமான வலுவான பழங்குடியினரின் வாக்கு திரட்டலும், மேல் அசாம் மற்றும் மலைப் பகுதிகளில் பாஜவின் விரிவாக்கமும் இணைந்து, பழங்குடியினர் தொகுதிகளில் தேஜ கூட்டணி கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைப் பெறுவதை உறுதிசெய்தன என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்கு வங்கத்தில், தேர்தல் முடிவுகள், தனி தொகுதிகளில் ஒரு தீர்க்கமான அரசியல் மறுசீரமைப்பைக் குறிக்கின்றன. எஸ்சிகளுக்கான 68 தனி தொகுதிகளில், பாஜ 51 தொகுதிகளில் ( 75 சதவீதம்) வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 17 இடங்களை மட்டுமே வென்றது. வடக்கு வங்காளம் மற்றும் ஜங்கிள்மஹால் போன்ற பழங்குடியினப் பகுதிகளில் பாஜ பழங்குடியினருக்கான 16 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. ஒட்டு மொத்தமாக 84 எஸ்சி, பழங்குடியினர் தனித் தொகுதிகளில் 67 இடங்களை பாஜ வென்றது. திரிணாமுல் கட்சிக்கு 17 இடங்கள் கிடைத்தது.
