புது டெல்லி: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்(ஆதார்) புதிய தலைமைச் செயல் அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சவுரப் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1998-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சவுரப் விஜய், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். மத்திய பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, அவர் அரசின் கூடுதல் செயலாளர் பதவி மற்றும் ஊதியத்தில் பொறுப்பேற்க உள்ளார்.
குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி மனிஷ் பரத்வாஜ், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் (என்.டி.எம்.ஏ) செயலாளராகப் பணியாற்றி வந்தார்.
அவருக்கு பதில், பஞ்சாப் கேடரைச் சேர்ந்த 1999-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நீல்காந்த் எஸ். அவாத், என்டிஎம்ஏ புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக பிரியங்க் பார்தி நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் தேசிய தகவல் மையத்தின் தலைமை இயக்குநராகவும் அவர் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
