திருமலை: ஆந்திராவில் ஓராண்டாக பணிக்கு வராத 51 அரசு டாக்டர்களை டிஸ்மிஸ் செய்து மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் 33 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிந்து கொண்டு ஓராண்டாக பணிக்கு வராத 51 அரசு டாக்டர்களை பணிநீக்கம் செய்து மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார் யாதவ் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இவர்களில், 8 பேர் இணைப்பேராசிரியர்கள், 41 பேர் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இருவர் பயிற்றுநர்கள் ஆவர்.
இதுதவிர பணிக்கு வராத மேலும் 33 மருத்துவர்களுக்கு குற்றச்சாட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. அதோடு மேலும் 3 பேராசிரியர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் சத்யகுமார் யாதவ் கூறுகையில், ‘மருத்துவர்களின் பொறுப்பற்ற தன்மையை அலட்சியப்படுத்தும் கேள்விக்கே இடமில்லை. ஒரு வருடமாக பணிக்கு வராதவர்களை பதவி விலகியவர்களாக கருதி நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இருப்பினும் நோட்டீஸ் வழங்கியும் பதிலளிக்க தவறியதாலும், போதுமான அவகாசம் வழங்கப்பட்டதாலும் 51 அரசு டாக்டர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்’ என்றார்.
