பெய்ஜிங்: ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி சீனாவுக்கு ஒரு நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து அராக்ச்சி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த முக்கிய பேச்சுவார்த்தையில், ஹார்முஸ் ஜலசந்தியை கூடிய விரைவில் திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. அதேசமயம், அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என ஈரான் அளித்துள்ள வாக்குறுதிக்கு சீனா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. இந்த வாக்குறுதியானது, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை தொடங்குவது சர்வதேச சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்பு என்றும், இதற்கு ஈரான் விரைவில் செவிசாய்க்கும் என நம்புவதாகவும் வாங் யி தெரிவித்தார்.
முழுமையான போர்நிறுத்தமே தற்போதைய அவசரத் தேவை என சீனா கருதுகிறது. இதற்கு பதிலளித்த ஈரானிய அமைச்சர் அரக்ச்சி, ஜலசந்தியை திறப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்றும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தர தீர்வை எட்ட ஈரான் விரும்புவதாகவும் கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகின்ற 14 ம் தேதி சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இருநாடுகளில் வெளியுறவு துறை அமைச்சர்கள் சந்திப்பு நிகழ்ந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. எனவே ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கருதப்பட்டு வருகின்றது.
