தகுதியற்ற தலைவரான ராகுல் காந்தியால் இந்தியா கூட்டணி விரைவில் சிதறும்: பாஜ பதிலடி

 

புதுடெல்லி: ‘இந்தியா கூட்டணியை வழிநடத்த தகுதியற்ற தலைவர் ராகுல் காந்தி’ என விமர்சித்த பாஜ, ‘ராகுலின் தலைமை காரணமாகவே இந்தியா கூட்டணி விரைவில் சிதறும்’ என கூறி உள்ளது. பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா தனது எக்ஸ் பதிவில், ‘‘மே 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே இந்தியா கூட்டணி முடிவுக்கு வந்து விட்டது. காங்கிரஸ் ஏமாற்றாதவர்கள் என்று யாருமே இல்லை. திமுகவிற்கே அவர்கள் இப்படி செய்திருக்கிறார்கள் என்றால் சமாஜ்வாடி கட்சிக்கு என்ன செய்வார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். காங்கிரஸ் இப்போது திமுகவை விட்டு தவெகவை நாடி உள்ளது. இதுவே இந்தியா கூட்டணியின் இறுதி சடங்கு. இந்தியா கூட்டணிக்கு என எந்தவொரு குறிக்கோளும் தொலைநோக்கு பார்வையும் இருந்ததில்லை. பதவி ஆசை, ஊழல், கமிஷன், மோடிக்கு எதிரான வெறி ஆகிய காரணங்களுக்காக மட்டுமே ஒன்றிணைந்தனர். இப்போது சீட்டு கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது’’ என்றார்.

பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ராகுல் காந்தி நீங்கள் தலைமைப் பொறுப்புக்கு தகுதியற்ற தலைவர். இதன் காரணமாகவே உங்கள் கட்சி முழுவதுமாக சீரழிந்து சிதறிக் கொண்டிருக்கிறது. இன்று சொல்கிறேன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சில வாரங்களில் இந்தியா கூட்டணி முற்றிலுமாக அழிந்து விடும். இந்தியா கூட்டணி உடைந்து சிதறப் போகிறது என்ற தகவல் எங்களுக்கு நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் கிடைத்துள்ளது. அதற்கு வேறு தீர்வே இல்லை. இதை நாங்கள் ஏதோ பேச்சுக்கு சொல்லவில்லை. இதற்கான பழி முழுவதுமாக ராகுல் காந்தியின் தலையில்தான் விழும். அது நிகழும் போது அவர் அநேகமாக வெளிநாட்டில் இருப்பார். எனவே அது அவருக்கு பெரிதாக கவலை அளிக்கும் விஷயமாக இருக்காது. ராகுல் காந்தியின் தலைமை காங்கிரசை மட்டுமில்லாமல் அதன் கூட்டணி கட்சிகளையும் பலவீனப்படுத்திவிட்டது.
இந்தியா கூட்டணியின் தலைவர்கள் அனைவரையும் பாருங்கள். ராகுல் காந்தி, கெஜ்ரிவால், மம்தா, இவர்கள் அனைவரும் இப்போது ஒன்றிணைந்துள்ளனர். தேர்தல்களை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டிய நேரத்தில் இவர்கள் சேராமல் தனித்தனியாக போட்டியிட்டனர்.

தேர்தலில் தோற்ற பிறகு ஒன்றிணைந்துள்ளனர். ராகுல் காந்தி தேர்தல் அரசியலில் இருந்து தொடர்பற்று விலகி நிற்கிறார். ரோஹிங்கியாக்கள், வங்கதேசத்தவர்களுக்கு ஆதரவாக நிற்பது, மறுபுறம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஊடுருவல்காரர்கள் என அழைக்கும் ராகுல் காந்தி அவர்களே, இதை சற்று கவனமாக கேளுங்கள். தேர்தல் பணிகள் மும்முரமாக நடக்கும் சமயத்தில் நீங்கள் அந்தமான் தீவுகளுக்கு சுற்றுலா சென்று விடுகிறீர்கள். அங்கே இருந்து கொண்டு சீனாவின் தூண்டுதலின் பேரில் அவதூறு பிரசாரங்களை பரப்புகிறீர்கள். முக்கியமான அரசியல் தருணங்களில் மீண்டும் திடீரென மறைந்து ஓமன் நாட்டிற்கு செல்கிறீர்கள். ஆனாலும் தேர்தலில் உங்களுக்கு சீட்டுகள் கிடைத்து விடும் என நினைக்கிறீர்களா? எதுவும் கிடைக்கப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Stories: