சண்டிகர்: பஞ்சாபின் ஜலந்தரில் எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமையகத்திற்கு வெளியே நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் பைக் மற்றும் போக்குவரத்து சிக்னல் கம்பல் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து அமிர்தசரஸில் உள்ள ராணுவ பாசறைக்கு அருகே நள்ளிரவு 11 மணியளவில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த 2 குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது குறித்து அமிர்தசரஸ் மூத்த காவல் கண்காணிப்பாளர் சுஹைல் மிர் காசிம் கூறுகையில், ‘‘முதல் கட்ட ஆய்வில் ஒருவர் சுற்றுச்சுவரை நோக்கி வெடிகுண்டு வீசியதால் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பினால் அங்கிருந்த தகரத்தின் ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தடயவியல் மற்றும் வெடிகுண்டு அகற்றும் குழுவினர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது” என்றார். இது குறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் கூறுகையில், ‘‘செவ்வாயன்று இரவு நடந்த இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆபரேஷன் சிந்தூர் ஆண்டு தினம் என்பதால் பஞ்சாபில் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தீட்டிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் என கருதுகிறோம்” என்றார்.
