ராமேஸ்வரம், ஏப். 30: மீன்பிடி துறைமுகத்தில் படகு தீப்பிடித்து எரிந்ததால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் தெற்கு பகுதியில் மீனவர்கள் படகுகளை கரைக்கு ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரையில் கிடந்த பயன்பாடு இல்லாத பழைய படகு ஒன்று நேற்று பிற்பகல் திடீரென தீப்பிடித்து எரிந்து புகை மண்டலமாக காணப்பட்டது.
இதுபற்றி மீனவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மீனவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் அருகில் இருந்த படகுகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர். போலீசார் விசாரணை செய்ததில், படகின் அருகே குவிந்து கிடந்த கழிவு குப்பைகள் தீப்பிடித்து எரிந்து படகுக்கு பரவியது தெரியவந்தது. இச்சம்பவம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
