தேனி, ஏப். 30: தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் நடைபாதை மற்றும் பயணிகள் உட்காரும் இடங்களில் டூவீலர்களை நிறுத்துவதால் பயணிகள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், ஆக்கிரமித்து நிறுத்தப்படும் டூவீலர்கள், ஆக்கிரமிப்பு கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தேனி நகர் பை-பாஸ் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இப்புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கோவை, திருப்பூர், நாகர்கோயில், கன்னியாகுமரி உள்ளிட்ட வெளியூர்களுக்கு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.
இதனால் தேனி நகரில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பயணிகளும், புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்தே செல்கின்றனர். இதனால் புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும். இதில் நகராட்சியின் சார்பில் பஸ் ஸ்டாண்டில் உள்ள காண்டிராக்ட் விடப்பட்டுள்ள வணிக வளாகத்தில் கடை நடத்துவோர் பலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு, பயணிகள் நடந்து செல்வதற்காக ஒதுக்கப்பட்ட நடைபாதை கடைக்காரர்களால் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால், நடைபாதையில் நடக்க முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பஸ்களுக்காக பயணிகள் காத்திருந்தால், தங்கள் கடைகளுக்கு இடைஞ்சலாக நிற்கக் கூடாது என பயணிகளை கடைக்காரர்கள் விரட்டும் நிலையும் உள்ளது. பொதுமக்கள் வசதியை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
