புதுடெல்லி: 124 டிகிரி வெயில் அடிச்சாலும் நான் காரில் ஏசி போட்டு பயணிப்பதில்லை. பாக்கெட்டில் ஒரு பெரிய வெங்காயத்தை வைத்திருந்தாலே உடம்பு குளுகுளுன்னு இருக்கும் என்று ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், மக்கள் ஹீட் ஸ்ட்ரோக் பயத்தில் குடை, தண்ணீர் பாட்டில், தர்பூசணி, இளநீரை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் ஒரு ‘‘பக்கா லோக்கல்” தீர்வை கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனது குணா தொகுதிக்குட்பட்ட பிச்சோர்-சிவ்புரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிர்ராதித்ய சிந்தியா பேசுகையில், ‘‘எனது காரில் நான் ஏசி பயன்படுத்துவதில்லை. 124 டிகிரி வெயில் அடித்தாலும் எனக்கு கவலை இல்லை” என கெத்தாக ஆரம்பித்தார். என்னடா இது… இவ்வளவு வெயிலையும் எப்படித் தாங்குகிறார் எனத் தொண்டர்கள் வியந்து பார்த்தபோது, திடீரென தனது பாக்கெட்டில் இருந்து ஒரு ‘பெரிய வெங்காயத்தை’ எடுத்து காட்டி அனைவரையும் அதிர வைத்தார்.
‘‘பாக்கெட்டில் ஒரு வெங்காயத்தை வைத்துக் கொண்டால், இந்த கோடை வெயில் உங்களை ஒன்றும் செய்யாது. உடம்பு குளுகுளுன்னு இருக்கும். இதெல்லாம் பழைய காலத்து டெக்னிக்” என அவர் சீரியஸாகக் கூற, கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவரும் உற்சாகமாகத் தனது பாக்கெட்டில் இருந்த வெங்காயத்தை எடுத்துக் காட்டி ‘ஆமாம் சாமி’ என வழிமொழிந்தார். டாக்டர்கள் சொல்வது என்ன? ஆனால், அமைச்சரின் இந்த ‘வெங்காய ஏசி’ பற்றி மருத்துவர்களிடம் கேட்டால், அவர்கள் தலையில்தான் அடித்துக் கொள்கிறார்கள்.
‘‘வெங்காயத்தைப் பாக்கெட்டில் வைப்பதற்கும், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் துளிகூட அறிவியல் பூர்வமான சம்பந்தம் இல்லை. வெங்காயம் வேண்டுமென்றால் சாம்பாருக்கு ருசி சேர்க்கலாம், ஆனால் அது ஒருபோதும் ஏசிக்கு மாற்றாகாது. வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைக்கத் தண்ணீர் குடிப்பது, பருத்தி ஆடைகள் அணிவது மற்றும் உச்சி வெளியில் மண்டையை பிளக்கும் காலத்தில் வெளியே போகாமல் இருப்பது போன்ற வழிகளைப் பின்பற்ற வேண்டும்’’ என்கிறார்கள்.
* அரச குடும்பத்து வாரிசு ஹார்வர்டில் படித்தவர்
தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்துகொண்டு இப்படி ஒரு ‘ஒயர்லெஸ்’ மருத்துவ முறையை அவர் விளக்கிய விதம் சமூக வலைதளங்களில் இப்போது பேசுபொருளாகியுள்ளது. குவாலியர் அரச குடும்பத்தில் பிறந்த ஜோதிர்ராதித்ய சிந்தியா. அமெரிக்காவில் உள்ள உலக புகழ்பெற்ற ஹார்வர்ட், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்தவர். இவரது தந்தை மாதவராவ் சிந்தியா. காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக, ஒன்றிய அமைச்சராக இருந்தவர்.
கடந்த 2001ல் தந்தையின் திடீர் மரணத்திற்கு பிறகு காங்கிரசில் சேர்ந்த ஜோதிர்ராதித்ய சிந்தியாவுக்கு எம்.பி பதவியோடு, ஒன்றிய அமைச்சர் பதவியும் பல முறை வழங்கப்பட்டது. ஆனால், 2020ல் ம.பி காங்கிரஸ் அரசில் முதல்வராக இருந்த கமல்நாத்தை மாற்றிவிட்டு தனக்கு அந்த பதவியை தர வேண்டும் என்று ஜோதிர்ராதித்ய சிந்தியா கொடுத்த நெருக்கடியை காங்கிரஸ் மேலிடம் நிராகரிக்க, கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்த்து, பாஜவுக்கு தாவினார். இதனால், மபியில் பாஜ ஆட்சி அமைத்தது. இதற்கு பரிசாக அவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கிடைத்தது.
