லக்னோ: உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் தீக்காயமடைந்த பாஜ பெண் எம்எல்ஏவை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். நாடாளுமன்ற எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்தவும்,அதன் அடிப்படையில் பெண்களுக்கு 33 % இடஒதுக்கீட்டை கொண்டுவருவதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தோற்கடிக்கப்பட்டது.
இதை கண்டித்து கடந்த வாரம் உபி பாஜவினர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவின் உருவ பொம்மைகளை எரித்தனர். இந்த போராட்டத்தில் உருவ பொம்மையை தீ வைக்க முயன்ற போது பாஜ பெண் எம்எல்ஏ அனுபாமா ஜெய்ஸ்வாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அகிலேஷ் நேற்று லக்னோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் பெண் எம்எல்ஏவை சந்தித்து அவரது உடல் குறித்து விசாரித்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ், சமூகத்தில் மக்களிடையே தீ பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. சமூகத்தில் நல்லிணக்கம் என்ற மழை பொழிய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
