அம்பாலா: பஞ்சாபில் சரக்கு ரயில்களுக்கான பிரத்யேக ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயன்றபோது குண்டு வெடித்ததில் மர்ம நபர் உடல் சிதறி பலியானார். பஞ்சாப் மற்றும் அரியானா எல்லைப் பகுதியான ஷம்பு ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஷம்பு – அம்பாலா இடையே சரக்கு ரயில்கள் செல்லும் பிரத்யேக தடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தை அடுத்து தடயவியல் நிபுணர்கள் குழு, வெடிகுண்டு அகற்றும் படை மற்றும் பிற ஏஜென்சிகளை சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தண்டவாளத்தை தகர்க்க முயன்ற மர்ம நபர் ஒருவரின் உடல் சிதறிய நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து ஒரு செல்போன் சிம் கார்டு மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து பட்டியாலா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் சர்மா கூறுகையில், ‘ஆரம்பகட்ட ஆய்வின்படி, இது ரயில் பாதையை தகர்ப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்பது தெரிகிறது. முன்கூட்டியே குண்டு வெடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
இதனிடையே உடல் சிதறி பலியானவர் டார்ன் டரன் மாவட்டத்தில் உள்ள பஞ்ச்வார் கிராமத்தை சேர்ந்த ஜக்ரூப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அமிர்தசரஸில் ஜக்ருப் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மலேசியாவை தளமாக கொண்டு இயங்கி வரும் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடைய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் தீவிரவிசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இவர்களிடம் இருந்து கையெறி குண்டு, கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், அதிநவீன் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சரக்கு ரயில்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த ரயில் தண்டவாளத்தில் போத்தோனியா கிராமத்திற்கு அருகே நடந்த இந்த குண்டு வெடிப்பில் ரயில் தண்டவாளம் சேதமடைந்தது. மேலும் ரயில் பாதையின் அடியில் பள்ளமும் உருவானது. ரயில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஒரு சில மணி நேரங்களில் ரயில்போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பஞ்சாப் போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக பஞ்சாப் மாநிலம் சிர்ஹிந்த் பகுதியில் கடந்த ஜனவரி மாதத்தில் சரக்கு ரயில் இன்ஜின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
