விண்ணை முட்டும் எரிபொருள் விலை விமான சேவையை நிறுத்தும் நிலைக்கு சென்று விட்டோம்: ஏர்லைன்ஸ்கள் கதறல்

மும்பை: ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட முன்னணி ஏர்லைன்ஸ் நிறுவனங்களைக் கொண்ட இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: மேற்கு ஆசியா போர் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் விமான நிறுவனங்களின் இயக்க செலவு அதிகரித்துள்ளது. ஒரு விமானத்தை இயக்குவதற்கான செலவில் 40 சதவீதம் விமான எரிபொருளுக்காக மட்டுமே செலவிட வேண்டி உள்ளது.

இதுதவிர விமான எரிபொருள் விலையில் முன்னெப்போதும் இல்லாத உயர்வால் விமான நிறுவனங்களின் செயல்பாடு முழுமையாகவே சவாலுக்குள்ளாகி இருக்கிறது. இந்த சூழலில் விமான எரிபொருள் விலையில் செய்யப்படும் எந்தவொரு தன்னிச்சையான விலை நிர்ணயம் விமான நிறுவனங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தும்.

இது விமான சேவையை ஒட்டுமொத்தமாக நிறுத்துவதற்கும் வழிவகுக்கும். இதிலிருந்து விமான நிறுவனங்கள் தப்பித்து, தொடர்ந்து செயல்பட தற்போதையை சூழலை சமாளிக்கக் கூடிய உடனடியான அர்த்தமுள்ள நிதி உதவியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். விமான எரிபொருள் மீதான 11 சதவீத கலால் வரியை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: