ஜனவரியில் இறந்த சகோதரியின் எலும்புக் கூட்டை வங்கிக்கு சுமந்து சென்ற சகோதரன்: பணத்தை தராமல் அதிகாரிகள் இழுத்தடித்ததால் ஆத்திரம்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா (50). இவரது மூத்த சகோதரி கல்ரா முண்டா, கடந்த ஜன. 26ம் தேதி உயிரிழந்தார். அவர் கால்நடைகளை விற்பனை செய்து சிறுகச் சிறுகச் சேமித்த 20,000 ரூபாய் பணம், ஒடிசா கிராமின் வங்கியின் மாலிபோசி கிளையில் உள்ள கணக்கில் இருந்தது. படிப்பறிவு இல்லாத ஜீத்து முண்டா, தனது வாழ்வாதாரத்திற்காக அந்தப் பணத்தை எடுக்க வங்கிக்கு பலமுறை ஏறி இறங்கியுள்ளார்.

கல்ரா முண்டாவின் வங்கி கணக்கில் வாரிசுதாரராக நியமிக்கப்பட்ட நபரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதால், சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் சமர்ப்பிப்பதில் சிக்கல் நீடித்தது. இது குறித்த வங்கி அதிகாரிகளின் முறையான வழிகாட்டுதல் இல்லாததால், பணத்தைப் பெறுவதற்காக ஜீத்து முண்டா நீண்ட போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. இந்நிலையில் வங்கி அதிகாரிகள் பணத்தை எடுக்க கணக்கு வைத்திருப்பவர் நேரில் வரவேண்டும் என்று கூறியதால் ஆத்திரமடைந்த ஜீத்து முண்டா, புதைக்கப்பட்ட தனது சகோதரியின் எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து ஒரு மூட்டையில் கட்டி தனது முதுகில் சுமந்தபடி வங்கிக்கு எடுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டானா போலீசார், ஜீத்து முண்டாவை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் போலீசார் முன்னிலையில் அந்த எலும்புக்கூடு டயனாலி கிராமத்தில் மீண்டும் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. ‘ஜீத்து முண்டாவிற்கு சேர வேண்டிய பணத்தை சட்டப்பூர்வமாக பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீசார் தெரிவித்தனர்.

 

Related Stories: