திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு முதலாம் ஆண்டு படித்து வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த நிதின்ராஜ் என்ற தலித் மாணவன் கடந்த மாதம் கல்லூரியின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இக்கல்லூரி பேராசிரியர்களான ராம் மற்றும் சங்கீதா ஆகியோர் நிதின் ராஜை சாதி ரீதியாக அவமானப்படுத்தியது தான் தற்கொலைக்கு காரணம் என்று பெற்றோர் புகார் கூறினர். இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் இருவரும் தலைமறைவானார்கள்.
அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பேராசிரியை சங்கீதா போலீசில் சரணடைந்தார். இன்னொரு பேராசிரியரான ராம் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் நிதின்ராஜ் குடும்பத்திற்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும், கண்ணூர் பல் மருத்துவக் கல்லூரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தலித் அமைப்புகள் நேற்று கேரளாவில் 12 மணிநேர பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை திருவனந்தபுரம் தம்பானூர், நெடுமங்காடு, கழக்கூட்டம், கணியாபுரம், கொல்லம், அடூர், கண்ணூர் உள்பட பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் அரசு பஸ்களை செல்லவிடாமல் சிறை பிடித்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் இந்தப் பகுதிகளில் நீண்ட நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொல்லம், அடூர், கோழிக்கோடு கண்ணூர் உள்பட பல்வேறு பகுதிகளில் திறந்திருந்த கடைகள், வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை போராட்டக்காரர்கள் கட்டாயப்படுத்தி அடைக்க வைத்தனர். இது தொடர்பாக 101 பேர் கைது செய்யப்பட்டனர்.
