பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கன அடி திறப்பு

சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கம் 35 அடி உயரமும், 3231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா நதிநீர், ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து கொசஸ்தலை ஆறு வழியாக வரும் தண்ணீர் மற்றும் பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரத்து கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன.

தற்போது இந்த நீர்த்தேக்கத்தின் 35 அடி உயரத்தில் நேற்றைய நிலவரப்படி 31.33 அடி உயரம் நீர் நிரம்பியுள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் நீர் இருப்பு 2064 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்நிலையில் நீர்த்தேக்கத்தில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இணைப்பு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்றைய நிலவரப்படி இணைப்பு கால்வாய் வழியாக 250 கன அடி வீதம் செம்பரம்பாக்கம் ஏரிக்கும், பேபி கால்வாய் வழியாக 17 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து நீர் அனுப்பப்படும் என்றும், குடிநீர் அனுப்புவதில் பாதிப்பு ஏதும் இருக்காது என்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: