*ஆட்சியர் நடவடிக்ைக எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கிடங்கல் 1 தரைப்பாலம் கடந்த ஆண்டு வந்த பெஞ்சல் புயலின்போது மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிடங்கல் 1 பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது. அந்தப் பகுதியில் பெரிய பைப்புகள் வைத்து மண் கொட்டி தற்காலிக தரைபாலம் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் நகராட்சி சார்பில் 1.32 கோடி ரூபாய் செலவில் உயர் மட்ட பாலம் கட்டுவதற்கான பணி பூமி பூஜையுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16ம் தேதி துவங்கியது. ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களால் பாலம் கட்டும் பணிகள் தடைபட்டது.
இதனால் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போக்குவரத்திற்கு முக்கியமான உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவக்குவதில் காலதாமதம் ஏற்பட்டு பின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் தேதி பணிகள் துவங்கியது. பாலம் பணிகள் முடியும் தருவாயில் பாலத்தின் திட்டமிடல் தவறு என நகராட்சி அதிகாரிகள் உணர்ந்தனர். இதனால் பாலம் கட்டும் பணியை பாதியில் ஒப்பந்ததாரர் நிறுத்திவிட்டார்.
இதற்கிடையே வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வின்போது வந்த மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இவ்வளவு உயரமாக ஏன் பாலம் கட்டப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
பாலத்தில் ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஏற முடியாத நிலையில் பாலம் கட்டப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலத்தில் இரு கண்களில் ஒரு கண்கள் முழுவதுமாக பாலத்தினால் தடைபட்ட நிலையில் ஒரு கண்கள் வழியாக மட்டுமே வாகனங்கள் இயக்க முடியும்.
பேருந்து நிலையம் கட்டப்பட்ட நிலையிலும் நகராட்சி பேருந்து நிறுத்தத்தில் அதிக பேருந்துகள் வந்து நிற்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பாலம் முழுவதுமாக முடிவடையாத நிலையில் அவசர அவசரமாக அதில் இருபுறமும் சாலை அமைக்க ஜல்லி, மண்களை கொட்டி தற்காலிக பாதை உருவாக்கியதால் அதில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும்பொழுது சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
பருவமழைக்கு முன் பாலத்தின் பணிகளை முடித்தால் மட்டுமே பாலம் நிலை கொண்டு நிற்கும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரையிலும் பாலத்தின் ஒப்பந்ததாரர் எந்தவித முயற்சியும் எடுக்காததால் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான்கு வார்டு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஒப்பந்ததாரரிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், பாலத்திற்காக 50 ஆண்டுகளுக்கு மேல் அப்பகுதியில் வசித்து வந்தவர்களின் குடியிருப்புகளை அகற்றியதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
