*களம் இறங்கிய தன்னார்வலர்கள்
விகேபுரம் : மாசடைந்து வரும் தாமிரபரணி ஆற்றுநீரை சுத்தப்படுத்தும் வேளையில் தன்னார்வலர்கள் புதிய யுக்தி ஒன்றை கையில் எடுத்து செயல்படுத்தி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளார். நீரினை இயற்கையாகவே சுத்தப்படுவதில் தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நீரில் வாழும் தாவரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இது நீரில் வாழும் மீன்களுக்கு உதவுவதோடு, நீரின் தரத்தையும் மேம்படுத்துகிறது. உதாரணமாக தாழம்பூ செடி, சேம்பு, தழுதாழை, கல்வாழை, கோரை செடி, நன்னாரி, நீர்முள்ளி, தர்பை, சங்கம் குப்பி போன்ற செடிகள் நீரில் உள்ள நச்சுக்கள், கன உலோகங்கள், பாக்டீரியாக்கள், நைட்ரேட்டுகளை உறிஞ்சி நீரை சுத்தப்படுத்துகின்றன.
பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு சமவெளிப்பகுதியான பாபநாசம் தொடங்கி பழைய காயல் வரை பல இடங்களில் கழிவு நீர் கலப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மாசடைந்து வருகிறது.
இதனால் தாமிபரணி ஆற்றின் நீரை குளிப்பது மட்டுமின்றி குளிக்க முடியாத சூழலும் ஏற்பட்டு வருகிறது. எனவே தாமிபரணி ஆற்றின் நீரை சுத்தப்படுத்தும் வகையில் சமூக ஆர்வலர்கள் மூர்த்தி தலைமையில் நீரினை சுத்தப்படும் செடிகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி நெல்லை மாவட்டம் ஆலடியூர் ஆற்றுப் பாலம், தாமிரபரணி நதியின் வடக்கு கரையில் நடும்பணியினை சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி தலைமையில் எல்ஐசி அதிகாரி ஒய்ஸ்லைட், அம்பை ஆஷிஸ், செல்லத்துரை, முருகன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக நதிக்கரையோரம் நதிக்கு வேண்டாத நீருக்கு ஆபத்தை விளைவிக்கும் வேலி காத்தான் (விஷக்குளை) செடிகள் அதிகமாக வளர்ந்திருக்கின்றன.
நம் நாட்டில் இல்லாத இந்த வேற்று தாவரமான வேலி காத்தான் தாமிரபரணி நதியில் அதிகமாக வளர்ந்திருக்கும் இடங்களை தேர்வு செய்து, அவ்விடத்தில் அவற்றை வேருடன் பிடிங்கி அப்புறப்படுத்தி விட்டு, அதே இடத்தில், நீரை சுத்தம் செய்யும் வல்லமை படைத்த நம் நாட்டின் நீர் தாவரமான தாழம்பூ, சேம்பு, இண்டு இசங்கு தழுதாழை, கல்வாழை, கோரை, கிழங்கு செடி, நாணல், நன்னாரி, சங்கம் குப்பி போன்ற செடிகளை நட்டு வருவதாக சமூக ஆர்வலர் மூர்த்தி தெரிவித்தார்.
நீரை சுத்தப்படுத்த 2000 செடிகள்
இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், ‘நீரை சுத்தம் செய்யும் செடிகள், நீருக்கு தீங்கு விளைவித்து கார்பனை தரும் வேலிகாத்தான் (விஷக்குளை), அமலைசெடி, பார்த்தீனியம் போன்ற செடிகளை வளர விடாமல் தடுத்து விடுகிறது. அதோடு குடிநீருக்கான உறைக்கிணறுகளை சுற்றிய பகுதியில் நீருக்கு வேண்டாத இத்தீயசெடிகளை அழித்துவிட்டு, நீரினை சுத்தம் செய்யும் செடிகளை வளர்க்கும் போது இச்செடிகள் நீரை சுத்தம் செய்து விடுகிறது.
இதனை கருத்தில் கொண்டு நீரை சுத்தம் செய்யும் செடிகளை, பதியமிட்டு வளர்த்து பின், தாமிரபரணி நதிக்கரையில் 7 ஆண்டுகளாக நட்டு வருகின்றனர். இதுவரை பாபநாசம் முதல் ஊர்காடு வரை 2000 மேற்பட்ட இவ்வகை செடிகளை நட்டுள்ளனர்.
இச்செடிகள் பல்லுயிர் பெருக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும். நீரை சுத்தம் செய்யும் ஆமை, விலாங்கு, நத்தை, ஊசிகெண்டை, ஆரா, கெண்டை போன்ற நீர் உயிரினங்கள் இச்செடி அருகே, முட்டையிட்டு இனபெருக்கம் செய்ய ஏதுவாக உள்ளது’ என்றார்.
