மாமிசக் கழிவுகளை அதிகளவில் கொட்டுவதோடு வீடுகளின் கழிவுநீர் நேரடி கலப்பால் பாளையங்கால்வாயில் சுகாதார சீர்கேடு

*பழைய நிலைக்கு திரும்புமா?

நெல்லை : நெல்லையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாளையங்கால்வாயில் வீடுகளின் கழிவுநீர் நேரடியாக கலப்பதோடு பொதுமக்கள் விழிப்புணர்வின்றி மாமிசக் கழிவுகளையும் அதிகளவில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

அத்துடன் நோய் பரப்பும் மையமாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.வற்றாத ஜீவநதியாம் தன்பொருநை என்னும் தாமிரபரணி ஆற்றின் பழவூர் அணைக்கட்டில் இருந்து பாளையங்கால்வாய் தொடங்குகிறது.

இது சுமார் 42 கி.மீ., தூரம் ஓடி பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு உயிரூட்டுகிறது. 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இதனை நாரத வாய்க்கால் என பெருமையோடு கூறுகின்றன.

பழங்காலத்தில் கோட்டைகளைச் சுற்றி ஓடி நிலத்தடி நீரை உயர்த்தி செழிப்பைத் தந்த பெருமை இந்த கால்வாய்க்கு உண்டு. ஒரு காலத்தில் தெளிந்த நீரோடையாக ஓடிய இந்த கால்வாய் இன்று மாநகரப் பகுதிக்குள் நுழையும் போது தனது முகவரியை தொலைத்து விடுகிறது.

நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளை கடந்து செல்லும் இந்த கால்வாயில் வீடுகளின் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. பிளாஸ்டிக் பைகள், உடைந்த பாட்டில்கள் என சகல விதமான திடக்கழிவுகளையும் மக்கள் வீசுகின்றனர்.

குறிப்பாக மேலப்பாளையம் பகுதியில் மாமிசக் கழிவுகளை கால்வாய் கரைகளில் கொட்டிவிடும் அவலம் தொடருகிறது. இதுஒருபுறம் இருந்தால் கால்வாய் முழுவதும் அமலைச்செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகின்றன. குப்பைகளால் பாளையங்கால்வாய் தாங்க முடியாத துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘பாளையங்கால்வாயை பாதுகாப்பது நமது வருங்கால சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு ஆகும். இதனை அனைவரும் உணர வேண்டும். கோடை காலத்தை பயன்படுத்தி அரசு அமலைச் செடிகளை அகற்றி நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: