*மாற்றங்கள் செய்ய கோரிக்கை
ஊட்டி : கோடை சீசன் துவங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு காண உரிய போக்குவரத்து மாற்றங்கள் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தபட்டுள்ளது.ஊட்டிக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்குள்ள குளு குளு காலநிலை அனுபவித்த படியே சுற்றுலா தலங்களை பார்த்து மகிழ்கின்றனர்.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான பாலக்காடு போன்ற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி-குன்னூர்-மேட்டு பாளையம் வழியாக வருகின்றனர்.கேரளாவின் வயநாடு,மலப்புரம் மற்றும் கர்நாடகாவின் மைசூர்,சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து வரும் சுற்றுளா பயணிகள் கூடலூர் வழியாக வருகை புரிகின்றனர். இந்நிலையில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சமவெளி பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காகவும்,கோடை விடுமுறையை கொண்டாடவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.ஊட்டி வர இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளதால் இ-பாஸ் பெற்று வந்து செல்கின்றனர்.
இதனால் இங்குள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளது.குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.பெரும்பாலானோர் சொந்த வாகனங்களில் வருவதால் ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதுதவிர ஊட்டி-குன்னூர் சாலையில் வேலிவியூவில் இருந்து வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. கூடலூர் சாலையில் எச்பிஎப் பகுதியில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதேபோல் கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக எஸ்டேட்களில் இருந்து ஊட்டி நகருக்கு வரும் உள்ளூர் பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குன்னூர் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்கும் விதமாக பேரிகார்டுகள் வைத்து தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஏப்ரல் மாத துவக்கத்திலேயே மாவட்ட காவல்துறை சார்பில் அதிகாரிகள் மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு ஊட்டி நகரம் மற்றும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். இதன் மூலம் ஒரளவிற்கு நெரிசல் கட்டுபடுத்தப்பட்டு வந்தது.
இந்த சூழலில் சட்டமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து மாற்றம் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்தல் முடிந்த நிலையில் நகரில் பார்க்கிங் வசதிகள் உள்ள இடங்களை கண்டறிந்து தயார் செய்ய வேண்டும். பார்க்கிங் தளங்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் கடைபிடித்ததை போல் முக்கிய சாலை சந்திப்புகளில் க்யூஆர் கோட் மூலம் சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்கள், வழி போன்ற விவரங்களை அறிந்து கொள்ள வசதிகள் ஏற்படுத்திர தர வேண்டும். போக்குவரத்து மாற்றம் செய்வதுடன், கனரக வாகனங்கள் நகருக்குள் வரும் நேரத்ைதயும் முடிவு செய்ய வேண்டும் என உள்ளூர் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
