ஓசூர், ஏப்.25: ஓசூரில் பாதாள சாக்கடை திட்டப்பணியில் வீட்டு குடிநீர், கழிவுநீர் கால்வாய் இணைப்பு குழாய்கள் சேதமடைந்து, ஒரு வாரமாக தண்ணீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஓசூர் மாநகரில் பல வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு, மாநகராட்சி ஊழியர்கள் குழி தோண்டிய போது வீட்டு குடிநீர் இணைப்பு, கழிவுநீர் கால்வாய் இணைப்பு குழாய்கள் சேதம் அடைந்தது. மேலும் பாதாள சாக்கடை திட்டம் நடைபெறும் பகுதிகளிலும், மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களிலும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. பாரதிதாசன் நகர், காமராஜர் நகர், ராஜூ நகர் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த பல மாதங்களாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதை சீரமைக்காமல் குழிகள் தோண்டப்பட்ட பகுதியில், இணைப்புகள் சேதமடைந்த பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் சிமெண்ட் கலவை போடப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்கு வழங்கும் குடிநீர் குழாய்களும் சேதமடைந்துள்ள நிலையில், அதை சீரமைக்காமல் உள்ளனர். எனவே, விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
