ஊத்தங்கரை, ஏப்.22: ஊத்தங்கரையில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, நேற்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், குடிமகன்கள் முன்கூட்டியே மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பரவலாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்யும் நபர்கள் குறித்து புகார்கள் இருந்து வருகிறது. இதனால், அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிையை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை போலீஸ் எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் மிட்டப்பள்ளி எம்ஜிஆர் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்(24) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 277 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
