திருமங்கலம் ஏப். 23: திருமங்கலம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் உள்ள டி.குன்னத்தூரில் இவர் கட்டியுள்ள அம்மா கோயில் தான், இவருக்கான தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அலுவலகமாக இருந்து வந்தது. இதற்கிடையே அம்மா கோயிலில் ஏழு முறையும், ஆர்.பி.உதயகுமாரின் வாகனத்தை இரண்டு முறையும், ஏற்கனவே பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர்.
இந்நிலையில், திருமங்கலம் தொகுதியில் அதிமுக தரப்பில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா தீவிரமாக நடைபெறுவதாக, தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்மா கோயிலில் நேற்று இரவு 9.30 மணி அளவில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அந்த நேரத்தில் வேட்பாளர் ஆர்பி.உதயகுமார் அங்கு இல்லை. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்டவை குறித்த தகவல்கள் ஏதும், தேர்தல் அதிகாரிகளால் உடனடியாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
