சேலம்: முதல்வர் கனவு சிதைந்து போனதால் ஆத்திரம் அடைந்த நடிகர் விஜய், தேர்தல் பிரசார இறுதிநாளில் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக அட்டாக் செய்ததின் பரபரப்பு பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக தேர்தலை பொறுத்தவரையில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைந்து தேர்தலை சந்திக்கும். ஏதாவது ஒரு தேர்தலில் 3வது அணி அமையும். சில கட்சிகள் தனித்தே தேர்தலை சந்திக்கும். ஆனால் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 4 அணிகள் களத்தில் இறங்கியுள்ளது.
இதில் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்று விடலாம் என்ற எண்ணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருந்தார். இதற்கான ரகசிய ஏற்பாடுகளை செய்து வந்தார். இதற்கு முன்னோட்டமாக பிரசார கூட்டத்தில் தவெக கொடியை தூக்கிப்பிடித்து சிலர் அசைத்தனர். இதனை பார்த்த எடப்பாடியோ, பிள்ளையார் சுழி போட்டாச்சு என அவருக்கே உரித்தான சிரிப்பில் கூறினார். இதனால் தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என கட்சி தொண்டர்கள் கூறிவந்தனர்.
இதுதொடர்பாக அதிமுக தரப்பில், ரகசிய பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது விஜய் தரப்பில் அதிரடியாக 10 கட்டளைகள் விதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதில் முக்கியமானது முதல்வர் வேட்பாளர் விஜய் தான். மந்திரி சபையில் அதிமுகவினரும், தவெகவினரும் இடம்பெறுவார்கள். எல்லா மாவட்டத்திலும் சரிபாதி தொகுதி ஒதுக்கவேண்டும். இதன் மூலம் இருவரும் கட்சியை வளர்த்துக்கொள்ளலாம். நாடாளுமன்ற தேர்தலிலும் 40 தொகுதிகளை வெல்வோம். ஒன்றிய அமைச்சரவையிலும் இடம்பெறலாம்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தினால் யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என்மீதும் படிந்துவிடும். எனவே, அவருக்கு மந்திரி பதவி என நினைத்து பார்க்க வேண்டாம்’ என எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிர்ச்சியடைந்தார். 30 ஆண்டு தமிழகத்தை ஆண்ட கட்சி. நான்கரை ஆண்டுகள் முதல்வராக இருந்திருக்கிறேன். எனக்கு முதல்வர் பதவி கிடையாது என சொல்ல நேற்று அரசியலுக்கு வந்த இவர் யார்? என ஆவேசமான அவர், நடிகர் விஜய் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார்.
இனிமேல் தவெக என்ற பழம் புளிக்கும் என கருதி, அக்கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சே இனி கிடையாது என வெளியே வந்தார்.இதற்கிடையில் பாஜகவும், நடிகர் விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க திட்டமிட்டு செயல்பட்டது. கரூரில் அப்பாவி மக்கள் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சென்னையில் சிபிஐ அலுவலகம் இருக்கும் நிலையில், டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தியது. இதன்மூலம் அவருக்கு நெருக்கடி கொடுப்பதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
முதல்வர் பதவி எடப்பாடிக்கும், துணை முதல்வர் பதவி விஜய்க்கும் வழங்கலாம் எனவும் கோரிக்கை வைத்தது. பின்னர் விஜய்யும், எடப்பாடியும் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை பிரித்து கொள்ளலாம் எனவும் கூறியது. ஆனால் இந்த டீலுக்கு இருவரும் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து நடிகர் விஜய், வெளிப்படையாக கூட்டணி மந்திரி சபை அமைக்கப்படும் என தெரிவித்தார்.
அவரது ஆசை வலையில் எந்த கட்சியும் சிக்கவில்லை. தனது முதல்வர் கனவுக்கு எடப்பாடி ஆப்பு வைத்ததால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற நடிகர் விஜய், அதிமுக ஒரு ஊழல் கட்சி என வெளிப்படையாக அறிவித்தார். இதையடுத்து ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டினர். இதற்கிடையில் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்பதை நடிகர் விஜய் தெரிந்து கொண்டார். முதல்வராக முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடைசிநாள் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிடும் கட்சிகளின் பெயரை கூறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட கூற மறுத்துவிட்டார். அதிமுக என கட்சியின் பெயரைச்சொல்லாமல் ‘மற்றும் பலர்’ என்று கூறி கட்சியையே அவமானப்படுத்திவிட்டார். அதேபோல 10 தோல்வி அடைந்தவர் எனவும், இடைப்பாடி தொகுதியை தவிர வேறு தொகுதியில் போட்டியிட தைரியம் இல்லாதவர் எனவும், எனது கட்சியின் சின்னத்தை திருடியவர் எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை கூறினார்.
இதனால் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘நேற்று கட்சி தொடங்கியவர் எங்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. அதிமுகவை வைத்து முதல்வர் ஆக நினைத்து தோல்வியடைந்ததால் விரக்தியில் பேசுகிறார். இத்தேர்தலில் சரியான பாடத்தை மக்கள் கொடுப்பார்கள்’ என்றனர். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியும், தேர்தலுக்கு பிறகு பதிலடி கொடுப்பார்’’ என தெரிவித்தனர்.
