திருப்போரூர்: திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி திருக்கோயிலை ஒட்டி சரவணப்பொய்கை குளம் உள்ளது. இக்குளத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் மீன்குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஆண்டுதோறும் கோடை வெயிலின் தாக்கத்தினால், கோயில் குளத்தில் விடப்பட்ட மீன்கள் செத்து மிதப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று சித்திரை கிருத்திகையை முன்னிட்டு சரவணபொய்கை குளத்தில் ஏராளமான பக்தர்கள் நீராடினர். அவர்கள் குளிப்பதற்கு பயன்படுத்திய சோப்பு, ஷாம்பு ஆகியவற்றின் ரசாயன கலவை காரணமாகவும், கோயில் வெயிலின் உக்கிரம் காரணமாகவும் நேற்று சரவணபொய்கை குளத்தில் விடப்பட்ட ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன.
இதனால் வடக்கு குளக்கரை சாலை வழியே கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடும் துர்நாற்றத்தினால் பெரிதும் அவதிப்பட்டனர். இதுகுறித்து கோயில் அதிகாரிகளிடம் சில பக்தர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்று மாலை கோயில் செயல் அலுவலர் மாதவன், மேலாளர் வெற்றிவேல் முருகன் ஆகியோர் குளத்தை பார்வையிட்டு, சரவணபொய்கை குளத்தில் கோயில் ஊழியர்களை கொண்டு செத்து மிதந்த மீன்களை முழுமையாக அகற்றினர். மேலும், அப்பகுதியில் துர்நாற்றத்தை போக்கும் வகையில், குளத்துக்கு வெளியே கிருமிநாசினிகளை தெளித்தனர்.
