பழநி: நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொடைக்கானலில் மலைக்கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குதிரைகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வர கூடிய சூழலில், பழநி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் பெரிய பகுதியாக இருக்கிறது.
கொடைக்கானலை பொறுத்த வரை கொடைக்கானல் நகரம் மட்டுமல்லாது, நகரை சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் அமைந்து உள்ளன. அதிலும் குறிப்பாக உரிய சாலை வசதிகள் இல்லாத மலைக்கிராமங்கள் இருக்கின்றன. சாலை வசதிகள் இல்லாத மலை கிராமங்களுக்கு வாக்கு பதிவு செய்ய கூடிய இயந்திரங்களான EVM மெஷின்கள், விவி பேட் உள்ளிட்டவற்றை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், பழநியிலிருந்து அனுப்பி வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
வாக்கு பதிவிற்கு தேவையான இயந்திரங்கள் அனைத்தும் குதிரைகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக வெள்ளகெவி உள்ளிட்ட உரிய சாலை வசதி இல்லாத, மிகவும் செங்குத்தான மற்றும் கரடுமுரடான பாதைகளைக் கொண்ட பகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்படுவது வழக்கமான ஒன்று. குதிரைகள் மேல் வைத்துக் கட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அழியாத மை மற்றும் வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்படும் பல்வேறு படிவங்கள் கொண்டு செல்லப்பட்டன.
நாளை வாக்குப்பதிவு முடிந்த பிறகு இரவுக்கு மேல் மீண்டும் இயந்திரங்கள் பழநிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலை உச்சியில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாத சூழலில், இது போன்ற பாரம்பரிய மற்றும் மாற்று வழியை தேர்தல் ஆணையம் பயன்படுத்துகிறது.
