சென்னை: பல்வேறு சலுகைகளை அறிவித்ததற்கு நன்றி தெரிவிவிக்கும் வகையில் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு வாக்களிப்போம் என்று சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சத்துணவு, அங்கன்வாடி சமையலர், உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதிய தொகை ரூ.2 ஆயிரத்தில் ரூ.3400 ஆகவும், சமையலருக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3200 ஆகவும், உதவியாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பணியில் இருந்து ஓய்வு பெறும் பொழுது வழங்கக்கூடிய ஒட்டுமொத்த தொகை அமைப்பாளர் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயாக இருந்ததை ரூ.2 லட்சமாகவும், சமையலர் உதவியாளர் ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்த தொகை ரூ.50,000த்தை ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மகப்பேறு விடுப்பு ஆறு மாதம் என்பதனை 12 மாதமாக மாற்றி அமைகப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மே மாத விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி கடனாக நன்றி தெரிவிக்கும் வண்ணம் எங்களது குடும்பங்களின் வாக்குகளையும் சேர்த்து 10 லட்சம் வாக்குகளை இன்முகத்தோடு வாரி வழங்க முன் வந்துள்ளோம். சொன்னதையும் செய்துள்ளார்.
சொல்லாததையும் சத்துணவு பணியாளர், அங்கன்வாடி பணியாளர்களுக்கு செய்துள்ளார். இந்த வேளையில் மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்றதற்கு பிறகு நிச்சயமாக எங்களது பணியாளர்களின் எஞ்சியுள்ள கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்ற முழு நம்பிக்கை எங்கள் கூட்டமைப்பிற்கு உண்டு. சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவித்த சலுகைகளுக்கு நன்றியினை உரித்தாக்கும் வண்ணம் திமுகவிற்கு நாளைய தினம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எங்களது கூட்டமைப்பு வாக்கு வங்கிகளை அளிக்க முடிவெடுத்துள்ளது. நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்ல அன்றே மறப்பது நன்று என்ற திருக்குறளுக்கு ஏற்ப திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
