×

கொடைக்கானலில் புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்: 18ம் தேதி தேர்பவனி

கொடைக்கானல்: கொடைக்கானல் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் லூர்து மவுண்ட் தந்திமேடு பகுதியில் புனித லூர்து அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆலயத் திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடைக்கானல் மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது.

அன்னையின் திருஉருவம் பொறித்த கொடி முக்கிய வீதிகள் வழியாக கொண்டு வரப்பட்டு, தந்திமேடு பகுதியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தை அடைந்தது. அங்கு கொடியேற்ற சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. திருப்பலிக்கு வடகரை பாறை இமானுவேல் மைய அதிபர் அருட்தந்தை புஷ்பராஜ் தலைமை வகித்தார். உதவி பங்குத்தந்தை கரோலின் சிபு முன்னிலை வகித்தார். திருப்பலிக்கு பின் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது.

இதில், கொடைக்கானல் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஸ்ரீதர், அருட்சகோதரிகள், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், பங்கு மக்கள் என ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தினமும் மாலை நவநாள் திருப்பலி, பிரார்த்தனை நடைபெறும். முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி வரும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை திருஇருதய ஆண்டவர் ஆலயப் பங்குத்தந்தை ஜெயசீலன் தலைமையில் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

Tags : Kodaikanal ,Holy Lourdes Shrine Festival ,Kodaikanal, Dindigul district ,Lourdes Mount Thantimedu ,
× RELATED சித்திரை திங்களில் இருந்து ஒவ்வொரு...