×

தமிழகத்தில் வரும் 23ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நியாயமாக நடைபெற டிரோன் கேமராக்கள் கண்காணிப்பு? தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் உயர் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் வருகிற 23ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நியாயமாக நடைபெற டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் படிவம் 12டி பயன்படுத்தி, தேர்தல் பணியில் உள்ள அரசு அலுவலர்கள் சுமார் 3.40 லட்சம் அலுவலர்கள் தபால் ஓட்டுக்கு தகுதி உள்ளவர்கள். இதில், தற்போது வரை 1.5 லட்சம் பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பத்துள்ளனர். அடுத்தடுத்த கட்டங்களில் பயிற்சியின்போது அந்த மையங்களிலேயே படிவம் வழங்கப்பட்டு, அந்த மையத்திலேயே தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் வாக்குப்பதிவு செய்யப்பட்டு, திருச்சியில் உள்ள பொது மையத்திற்கு பிரித்து மூடி முத்திரையிட்ட கவரில் அனுப்பப்படும்.

85 வயது மேற்பட்டவர்கள் 1.20 லட்சம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 70,000 என மொத்தம் 1.90 லட்சம் படிவம் பெற்று தபால் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 15 ஆயிரம் பேர் தமிழகம் முழுவதும் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். 115 துணை ராணுவ கம்பனிகள் வந்து சேர்ந்துள்ளது. மீதம் உள்ள 63 கம்பெனி இன்று இரவு வந்துவிடுவார்கள். தமிழகம் முழுவதும் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3579 பேர், பெண்கள் 443 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் களத்தில் உள்ளனர்.

வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளர் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய கைப்பேசி எண்ணில் இருந்து 1950, EPIC நம்பர் ஒரு இடைவெளி மற்றும் வாக்காளர் எண்ணை பதிவு செய்து குறுஞ்செய்தி அனுப்பினால், உங்கள் வாக்கு உள்ளதா என்பது குறித்து முழு தகவல் அளிக்கப்படும். தமிழக சட்டமன்ற தேர்தல் 2026க்கு 1032 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் நிதி இதுவரை கேட்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் 20,757 பேரிடம் அனுமதி பெற்ற துப்பாக்கிகள் உள்ளன.

இதில் 3000 தவிர்த்து மற்ற அனைத்து துப்பாக்கிகளும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை தேடப்படும் குற்றவாளிகளில் 2,650 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 75,032 வாக்கு சாவடிகள் இருந்தநிலையில் தற்போது வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 75,064ஆக உயர்ந்து உள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் 5,938 உள்ளது. 75,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிக அளவு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் விவி பேட் என்று சொல்லக்கூடிய யாருக்கு வாக்களித்தோம் என்று அறியும் கருவியும் தயார் நிலையில் உள்ளது.

இந்த முறை 140 சட்டமன்ற தொகுதிகளில் ஒரே ஒரு வாக்குப்பதிவு இயந்திரமும், 89 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரமும், பெரம்பூர், கொளத்தூர், ஆர்.கே.நகர் ஆகிய 3 தொகுதிகளில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கரூரில் மட்டும் அதிகபட்சமாக 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1.40 லட்சம் காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் 3.40 லட்சம் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். சி விஜில் செயலி மூலம் 3791 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

727 புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக வருகிற 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் விடுமுறைவிட உத்தரவிடப்பட்டுள்ளது. செய்தித்துறை அதிகாரிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாதுகாப்பு வாகனங்களில் சென்று செய்தி அனுப்புவது தொடர்பான புகார் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்களை கண்காணிப்பதற்கு ‘டிரோன்’ பறக்க விடுவது பற்றி தேர்தல் கமிஷன் பின்னர் முடிவு செய்யும். இதுபோன்ற பல்வேறு உத்திகளை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* ரூ.727 கோடி மதிப்பிலான பணம், பொருள் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ரூ.727 கோடி தேர்தல் தொடர்பாக பணம், நகைகள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் உள்ளவர்களுக்கு 265 கோடி மதிப்பிலான பணம் நகை இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பணமாக 126 கோடி ரூபாயும், 2 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள், ரூ.75 கோடி மதிப்பிலான போதை பொருட்கள், ரூ.295 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள், ரூ.227 கோடியில் இலவச பரிசு பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

* 3 நாள் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை
தமிழகத்தில் வருகிற 23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதில் துணை வாக்குச்சாவடிகளும் அடங்கும். தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் முழுவீச்சில் பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை 3 நாட்களுக்கு மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 21ம் தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்வது கண்டறிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Election Commission ,Chief Election Officer ,Chennai ,Tamil ,Nadu ,Tamil Nadu… ,
× RELATED குன்னூர் அருகே ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை