×

10 ஆண்டுகளில் வெறும் 1.22% வளர்ச்சி இந்திய ரயில்வேக்கு கடும் நெருக்கடி: ரயிலில் டிக்கெட் கிடைக்காததால் பேருந்து பயணத்திற்கு மாறும் பயணிகள்; ரயில்வே அதிகாரிகள் கவலை

சென்னை: பத்தாண்டில் வெறும் 1.22% வளர்ச்சி பெற்று இந்திய ரயில்வே கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை வேகமாக வளர்ந்தது. ஆனால் ரயில்வேயில் பயணிகளை ஏற்கும் திறன் அதே வேகத்தில் வளரவில்லை. ஆண்டுக்கு சராசரியாக வெறும் 1.22% மட்டுமே பயணிகள் எண்ணிக்கை வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இன்டிகோ விமான நிறுவனம் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டது. விமானம் கிடைக்காத லட்சக்கணக்கான மக்கள் ரயிலை நாடினர். ஆனால் ரயில்வேயால் அந்த கூடுதல் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.

ரயிலில் இடம் கிடைக்காத மக்கள் என்ன செய்கிறார்கள்? என்று கேட்டால் வேறு வழியில்லாமல் தனியார் பேருந்துகளில் ஏறுகிறார்கள். ரயில்வேயில் பயணிக்கும் மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஸ்லீப்பர் மற்றும் சாதாரண இரண்டாம் வகுப்பில் பயணிக்கும் சாமான்ய மக்கள். இவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. ஏசி மூன்றாம் வகுப்பில் பயணிக்கும் நடுத்தர வர்க்கத்தினரும் இப்போது விமானம் அல்லது தனியார் பேருந்தை தேர்ந்தெடுக்கின்றனர். காரணம் ஒன்றே ஒன்றுதான் – ரயிலில் இடமே இல்லை.

2026-27 பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.2.93 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கிய தொகையை விட இது வெறும் 8.5 % மட்டுமே அதிகம். இந்த காலகட்டத்தில் விலைவாசி உயர்ந்த அளவை கணக்கில் எடுத்தால், உண்மையில் ஒதுக்கீடு குறைந்துள்ளது என்பதே நிதியியல் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது. ஒதுக்கப்படும் பணத்தில் பெரும் பகுதி புதிய வசதிகளுக்கு செல்லவில்லை. அது பழைய கடனை திருப்பிச் செலுத்துவதிலேயே போகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மொத்த ரயில்வே முதலீட்டில் 8.4 % கடன் திருப்பிச் செலுத்துவதற்கு சென்றது. இந்த ஆண்டு அது 13.5 %, அதாவது சுமார் ரூ.40,000 கோடியாக உயர்கிறது. மக்களுக்கு புதிய ரயில் பாதை போட வேண்டிய பணம் கடனுக்கே போகிறது என்பது எளிய கண்க்காக உள்ளது.இந்திய ரயில்வே நிதி நிறுவனமான IRFC-க்கு ரயில்வேயின் மொத்த நிலுவை கடன் தற்போது ரூ.4.50 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது. 2028க்கு பிறகு பல பழைய கடன்களின் தவணை காலம் முடிவடையும்போது இந்த சுமை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கிலோமீட்டர் புதிய ரயில் பாதை போட கடந்த ஆண்டு ரூ.44 கோடி ஆனது. இந்த ஆண்டு அதே ஒரு கிலோமீட்டருக்கு ரூ.73 கோடி ஆகிறது. ஒரே ஆண்டில் 66 % செலவு உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, அதிக பணம் கொடுத்தும் போடும் பாதை குறைவாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு 700 கிலோமீட்டர் புதிய பாதை போட திட்டமிட்டனர். இந்த ஆண்டு 500 கிலோமீட்டர் மட்டுமே போட முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தடை நெரிசலே ரயில்வேயின் திறன் வளர முடியாத மிக முக்கியமான காரணம் என்று நிபுணர்கள் தொடர்ந்து சொல்லி வருகையில், கட்டப்படும் புதிய பாதைகளே குறைந்து கொண்டே போவது கவலையான போக்காக பார்க்கப்படுகிறது.

பயணிகள் வளர்ச்சி (10 ஆண்டு சராசரி) 1.22% மட்டுமே
நகரப்புற பேருந்து வளர்ச்சி
(ஆண்டு சராசரி) 25%
சாமான்ய வகுப்பு பயணிகள் பங்கு மொத்தத்தில் 66%
2026-27 மொத்த ஒதுக்கீடு ரூ.2.93 லட்சம் கோடி
இரண்டு ஆண்டு ஒதுக்கீடு வளர்ச்சி வெறும் 8.5%
கடன் திருப்பிச் செலுத்தல் (2024-25) மொத்தத்தில் 8.4%
கடன் திருப்பிச் செலுத்தல் (2026-27) மொத்தத்தில் 13.5%
இந்த ஆண்டு கடன் செலுத்தல் தொகை ரூ.40,000 கோடி
IRFC மொத்த நிலுவை கடன் ரூ.4.50 லட்சம் கோடிக்கும் அதிகம்
1 கி.மீ. பாதை செலவு (2025-26) ரூ.44 கோடி
1 கி.மீ. பாதை செலவு (2026-27) ரூ.73 கோடி
செலவு உயர்வு 66%
புதிய பாதை (2025-26 இலக்கு) 700 கி.மீ.
புதிய பாதை (2026-27 இலக்கு) 500 கி.மீ.
அதிவேக தடங்கள் அறிவிப்பு 7 தடங்கள்
அதற்கான நிதி ஒதுக்கீடு சுழியம்

* கடன் என்னாகும்?
2028க்கு பிறகு ரயில்வேயின் பல பழைய கடன்களின் தவணை காலம் ஒரே நேரத்தில் முடிவடையும். அப்போது திருப்பிச் செலுத்தல் சுமை இப்போதை விட பன்மடங்கு உயரும். புதிய வசதிகளுக்கு பணம் இன்னும் கடுமையாக பற்றாக்குறையாகும் என்று நிதி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

* இன்டிகோ நெருக்கடி கொடுத்த பாடம்
2024ல் இன்டிகோ விமான நிறுவனம் கடுமையான இயக்க சிக்கலில் மாட்டிக்கொண்டபோது லட்சக்கணக்கான பயணிகள் ரயிலை நாடினர். ஆனால் ரயில்வேயால் கூடுதல் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. போட்டியிடவே திறன் இல்லாத ரயில்வே, வாய்ப்பை இழந்தது.

* அறிவிப்பு உண்டு, பணம் இல்லை
இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏழு புதிய அதிவேக ரயில் தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. அறிவிப்பு மட்டும் பட்ஜெட்டாகாது என்பதை பொதுமக்களும், ரயில் பயணிகளும் நினைவுபடுத்துகின்றனர். ரயில்வேயில் இடம் கிடைக்காத மக்கள் ஆபத்தான சாலைகளை நோக்கி தள்ளப்படுகிறார்கள். கடன் சுமை ஆண்டுதோறும் கனக்கிறது. கட்டும் பாதை குறைகிறது. இந்த மூன்று சவால்களும் ஒரே நேரத்தில் ஒன்றுசேரும்போது, இந்தியாவின் மிக முக்கியமான பொது சொத்தான ரயில்வேயின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags : Indian Railways ,Chennai ,India ,
× RELATED குன்னூர் அருகே ரேஷன் கடையை உடைத்த காட்டு யானை