ஆற்காடு: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு பண பரிமாற்றம் நடைபெறும் வங்கி கணக்குகளை கண்காணிக்க வருமான வரித்துறை சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு சென்னை வருமான வரித்துறை உதவி ஆணையர் தேவி, கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள பைனான்ஸ் நிறுவன பங்குதாரர் ஒருவரது வங்கி கணக்கிலிருந்து, அதிக அளவு பணம் பரிமாற்றம் நடந்தது, கண்காணிப்பு அதிகாரிக்கு தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை கண்காணிப்பு அதிகாரி தேவி தலைமையிலான 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் 3 காரில் வந்து, பைனான்ஸ் நிறுவன பங்குதாரர் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இரவு சுமார் 10 மணியளவில் சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில், ரூ.1.20 கோடி மற்றும் அடமான பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சியினருக்கு பண பரிமாற்றம் நடைபெற்றதா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
