சென்னை: கடந்த 2015-16ம் நிதியாண்டில் ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 என நடிகர் விஜய் வருமான வரிக் கணக்கு காட்டியிருந்தார். அதை மதிப்பீடு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய் வீட்டில் 2015ம் ஆண்டு சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்துக்காக விஜய் பெற்ற ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி 2022 ஜூன் 30ம் தேதி ரூ.1.50 கோடியை அபராதமாக விதித்தனர். அந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவை 2019 ஜூன் 30ம் தேதிக்கு முன்பாகவே பிறப்பித்திருக்க வேண்டும். 6 ஆண்டுகள் காலதாமதமாக 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி.ஸ்ரீனிவாஸ், வருமான வரி மதிப்பீட்டை எதிர்க்கும் மேல்முறையீட்டு காலம் முடிந்த பிறகு, 6 மாத கால அவகாசத்துக்குள் இந்த அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரூ.1.50 கோடி அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை.
அந்த உத்தரவு செல்லும். எனவே இதில் நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை என்று கூறி விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார். அபராதம் விதித்த உத்தரவு தாமதமாக பிறப்பிக்கப்பட்டது என்ற காரணத்தையே மீண்டும் கூறி மேல் முறையீடு செய்யக் கூடாது என்றும் மற்ற காரணங்களை கூறி விஜய் மேல்முறையீடு செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இரு நீதிபதிகள் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
