ஈரோடு: சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞர் அணி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டி: கடந்த 21ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முன்னெடுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களால், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் குறைந்துள்ளன. வணிகர் நல வாரியத்திற்கும் பட்ஜெட்டில் ஒரு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைத்து வணிகர்களுக்கும் பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிற்கு கட்டாயம் மாநிலங்களவை சீட் வழங்க வேண்டும்.
ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக, நாட்டில் பல்வேறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் சூழ்ச்சி இருப்பதாக கருதுகிறோம். இந்த சூழ்ச்சி வர்த்தக போராக மாறிக்கொண்டிருக்கிறது. கடலில் ஒரு கப்பல் நகர வேண்டுமானால், நூற்றுக்கணக்கான கோடிகளை கொட்ட வேண்டிய நிலை இருக்கிறது. டீசல், பெட்ரோல் விலையை விட காஸ் அதிகமாக விலை ஏறக்கூடிய நிலை இருக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் ஆபத்து இருக்கிறது. இதற்கு வியாபாரிகள் காரணம் இல்லை. எனவே பிரதமர் மோடி நட்பு நாடுகளிடம் பேசி போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
