புதுச்சேரியில் 3 மையங்களில் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வு

*33% பேர் ஆப்சென்ட்

புதுச்சேரி : புதுச்சேரியில் 3 மையங்களில் நடந்த ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வில் 67% பேர் பங்கேற்ற நிலையில் 33% பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2026ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது.

இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் உள்ள கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலை பள்ளியில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வின் முதல் அமர்வு காலை 9 மணி முதல் 11 மணி வரையும், 2ம் அமர்வு மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரையும், 3ம் அமர்வு மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடந்தது. இத்தேர்வு எழுத 140 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 72 பேர் (51.43 சதவீதம்) மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 68 பேர் (48.57 சதவீதம்) தேர்வில் பங்கேற்கவில்லை.

இதேபோல், முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 2 மையங்களில் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு முதல் அமர்வு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், 2ம் அமர்வு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடந்தது. இத்தேர்வு எழுத 472 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 332 பேர் (70.34%) கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 140 பேர் (29.66%) தேர்வில் பங்கேற்கவில்லை.

இந்த 2 தேர்வுகளையும் எழுத மொத்தமாக 612 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 404 பேர் தேர்வில் கலந்து கொண்ட நிலையில் 208 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். மொத்தமாக இந்த தேர்வுகளில் பங்கேற்றோர் விகிதம் 67.01 சதவீதமாகவும், ஆப்சென்ட் ஆகியோர் விகிதம் 32.98 சதவீதமாகவும் உள்ளது.

மேலும், தேர்வு ஒருங்கிணைப்பாளர் ஸ்மித்தா, உதவி தேர்வு ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் முருகேசன், மேற்பார்வையாளராக ரயில்வே துறை துணை விஜிலன்ஸ் அதிகாரி மயிலேறு ஆகியோர் தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

இத்தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் வருமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, தேர்வர்கள் காலை 8 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத்துவங்கினர். தொடர்ந்து, தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, ஹால்டிக்கெட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு அமர்வு தேர்விலும் தேர்வர்களின் ஹால்டிக்கெட் சரிபார்க்கப்பட்ட பிறகே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டுவரவும் தடை விதிக்கப்பட்டது. இத்தேர்வையொட்டி தேர்வு மையங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

தேர்வர்களின் வசதிக்காக நேற்று காலை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு செல்ல அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதேபோல், தேர்வு முடிந்த பிறகு தேர்வு மையங்களில் இருந்து பேருந்து நிலையத்திற்கு செல்லவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

Related Stories: