*கால்வாயில் குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்
தண்டராம்பட்டு : விவசாய பாசனத்திற்கு 550 கன அடி திறக்கப்பட்டதால், சாத்தனூர் அணை நீர்மட்டம் 92.50 அடியாக குறைந்தது. திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும்.
பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. சமீபத்தில் பெய்த மழையால் அணை முழு கொள்ளளவு எட்டியதனால் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனால் விவசாய பயன்பாட்டிற்காக சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வலதுபுறம், இடதுபுறம் கால்வாய் வழியாக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் சாத்தனூர் அணை நீர்மட்டம் 92.50 அடியாக குறைந்து உள்ளது.
இந்நிலையில், நேற்று விடுமுறை தினம் என்பதால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாத்தனூர் அணையில் உள்ள ஆதாம் ஏவாள் பூங்கா, சிறுவர் பூங்கா, முதலைப்பண்ணை, ராக்கெட் பார்க், அறிவியல் பார்க் படகு குளம், நீச்சல் குளம், வீரமங்கை பார்க், சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பணிகள் சுற்றி பார்த்து பொழுதை கழித்தனர்.அதபோல் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட கால்வாய் தண்ணீரில் வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர்.
