*வனத்துறை தீவிர கண்காணிப்பு
ஊட்டி : காட்டுயானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா சிகரம் நேற்று மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. யானை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.ஊட்டியில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. தொட்டபெட்டா சிகரத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ேநற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது கார் மூலம் தொட்டபெட்டாவிற்கு பயணித்துள்ளனர். அப்போது தொட்டபெட்டா காட்சிமுனை சாலை மற்றும் வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று நடமாடியதை பார்த்து அச்சமடைந்தனர்.
பின்னர், யானை நடமாட்டம் தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் ராம் பிரகாஷ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு முழுவதும் வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வந்தனர். இருப்பினும், யானையை காண முடியவில்லை. இரவு தலையாட்டிமந்து பகுதியில் குடியிருப்பு மற்றும் வனத்தை ஒட்டிய பகுதியில் நடமாடியதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இதனிடையே யானை நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் நிலையில் பாதுகாப்பு கருதி நேற்று ஒருநாள் தொட்டபெட்டா காட்சிமுனை மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்தது. தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தி அங்கு வருகை புாிந்த சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
யானையின் நடமாட்டத்தை தரை வழியாகவும், டிரோன் கேமரா மூலமாகவும் வனத்துறையினர் கண்காணித்தனர். இதில், நேற்று தொட்டபெட்டாவிற்கு கீழ்புறம் உள்ள ைடகர்ஹில் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலையில் காட்டு யானை நடமாடியதை தொடர்ந்து நேற்று ஒருநாள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு வந்த யானையா? என இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும், தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என்றனர்.
