*பறக்கும் படையினர் பயணிகளிடம் தொடர் சோதனை
கூடலூர் : கேரள சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து ஊட்டிக்கு கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகரித்து உள்ளன. மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் மாநில எல்லை பகுதியான மேல் கூடலூர் சோதனை சாவடியில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோடை காலத்தில் சமவெளி பகுதிகளில் நிலவும் வெப்பத்தை தணித்துக் கொள்ளும் வகையில் சமவெளி பகுதியில் உள்ளவர்கள் சுற்றுலா தலங்களாக உள்ள மலை மாவட்டங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழும் நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள தமிழக – கேரளா மாநில எல்லை பகுதியான நாடுகாணி மற்றும் மேல் கூடலூர் ஆகிய சோதனைச் சாவடிகளில் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதேபோல் ஊட்டியில் இருந்து கேரளா மற்றும் கர்நாடகாவிற்கு திரும்பி செல்லும் வாகனங்கள் கூடலூர் நகரில் நீண்ட தூரம் வரிசையில் காத்து நின்றன. சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் கூடலூர் பழைய பேருந்து நிலையம் சிக்னல் பகுதியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
வழக்கமாகவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணங்களில் வாகனங்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புவது வாடிக்கை.
தமிழ்நாட்டில் பொது தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் சோதனைச்சாவடிகளில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடிகளில் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டாலும் ஊட்டிக்கு சுற்றுலா வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.
