பறக்கும்படை சோதனை எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி வர்த்தகம் பாதிப்பு

*விலை கடும் சரிவு

போச்சம்பள்ளி : தேர்தல் பறக்கும் படை சோதனையால், போச்சம்பள்ளி சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ புளி ரூ.32 வரை குறைந்ததால், விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளிய மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

குறிப்பாக போச்சம்பள்ளி, மத்தூர், சாமல்பட்டி, ஊத்தங்கரை, கல்லாவி, புலியூர், அரசம்பட்டி, வேலம்பட்டி, சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் லட்சம் புளிய மரங்கள் உள்ளன. விவசாயிகள் தங்கள் விவசாய தோட்டங்களிலும், நெடுஞ்சாதாலைத்துறையினர் சாலையோரங்களிலும் புளிய மரங்களை பாரமரித்து வருகிறார்கள். இப்பகுதியில் மண் வளம் புளி சாகுபடிக்கு கைகொடுத்து வருகிறது.

இப்பகுதியில் விளையும் புளியில் சதைப்பற்று மிகுந்திருப்பதால் சந்தைகளிலும் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் புளியை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், ஆந்திர, பாண்டிசேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும், இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் புளியை உலுக்கி எடுத்து கொட்டை, ஓடுகள், மற்றும் நார் நீக்கி சுத்தம் செய்து பதப்படுத்தி விற்பனை செய்கிறார்கள். நடப்பாண்டு புளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், மாவட்டத்தில் உள்ள சந்தைகளுக்கு வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு டன் கணக்கில் புளியை எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த காலங்களில் புளியின் தரத்தை பொறுத்து கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய சந்தையில் புளி விலை வெகுவாக குறைந்தது. கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், பானகம் தயாரிப்பில் புளி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதிக விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சந்தைக்கு வந்த விவிவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு சிலர் புளியை விற்காமல் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து புளி மொத்த வியாபாரிகள் கூறுகையில், `தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படுகிறது. ஒரு விவசாயி தனது நிலத்தில் அறுவடை செய்த விளைபொருட்களை, வியாபாரிகளிடம் விற்பனை செய்தால் அதற்கான எந்த ஆவணமும் இருப்பதில்லை.

தேர்தல் பறக்கும் படை கெடுபிடி காரணமாக, போச்சம்பள்ளி சந்தையில் புளியை வாங்க வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் முன் வராததால் விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில், கடந்த வாரத்தை காட்டிலும் புளி வரத்து அதிகரித்தது. சுமார் 40 டன் புளியை கொண்டு வந்து குவித்தனர். உரிய விலை கிடைக்கவில்லை. தேர்தல் முடிந்த பின்பு தான் புளி விலை உயரும்,’ என்றனர்.

Related Stories: