விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 60க்கு மேற்பட்டோர் பணியில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் அதிமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து நான்கு முறைக்கு மேல் பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணி தொடங்கப்பட்ட பின்னரே விபத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த தகவல்கள் தெரியவரும். சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தொடர்ந்து நான்கு முறை பட்டாசுகள் வெடித்துச் சிதறிய சம்பவம் சுற்றுவட்டார கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
