இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 21 மணி நேரம் நடத்தப்பட்ட அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இருதரப்பு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர். இதனால், 2 வார போர் நிறுத்தத்தின் அடுத்தகட்டம் கேள்விக்குறியாகி உள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போர், பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதன் பேரில், 2 வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த 2 வாரத்தில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் திட்டமிட்டன. இதற்கான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. அமெரிக்கா தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையில் பிரதிநிதிகளும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையில் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் இரு நாடுகளும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
விடிய விடிய 21 மணி நேரம் இப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் எந்த முடிவும் எட்டப்படாமல் இரு நாட்டு பிரதிநிதிகளும் வெறும் கையுடன் அவரவர் நாடுகளுக்கு நேற்று திரும்பிச் சென்றனர். ஈரானின் அணுசக்தி திட்டம், ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடு மற்றும் முடக்கப்பட்ட ஈரான் சொத்துக்களை விடுவிப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் களைவதில் இரு நாட்டு பிரதிநிதிகளும் தோல்வி அடைந்ததால், உடன்பாடு எட்டப்படவில்லை என ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பாகிஸ்தானில் இருந்து புறப்படும் முன்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது:
நாங்கள் 21 மணி நேரமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். ஈரான் தரப்பினருடன் பல முக்கியத்துவம் வாய்ந்த விவாதங்களை மேற்கொண்டோம். அதுவே இந்த சந்திப்பில் உள்ள நல்ல செய்தி. இதில் உள்ள கெட்ட செய்தி
என்னவென்றால், நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் எட்டவில்லை என்பதுதான். இந்த ஒப்பந்த முறிவு அமெரிக்காவை விட ஈரானுக்கே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என நான் கருதுகிறேன். ஈரான் அணு ஆயுதங்களை தேடாது என்பதற்கும், அணு ஆயுதங்களை உருவாக்க உதவும் கருவிகளை தேடாது என்பதற்கும் அவர்கள் தரப்பிலிருந்து உறுதியான உறுதிமொழியை எதிர்பார்க்கிறோம். ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதை தடுப்பதே அமெரிக்க அதிபர் டிரம்பின் முக்கிய இலக்கு.
இந்த அமைதி பேச்சுவார்த்தை மூலம் நாங்கள் சாதிக்க முயன்றதும் அதைத்தான். ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட காட்டிய தயக்கமே பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முக்கிய முட்டுக்கட்டைகளில் ஒன்று. ஈரானியர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்கும் சூழ்நிலையை எங்களால் எட்ட முடியவில்லை.ஆனால், இதுவே எங்களின் இறுதி மற்றும் சிறந்த முன்மொழிவு என்பதை கூறிக்கொண்டு இங்கிருந்து புறப்படுகிறோம். ஈரானியர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்களா என்று பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார். ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தனது எக்ஸ் பதிவில், ‘‘நாங்கள் எதிர்கால திட்டத்துடன் கூடிய முயற்சிகளை முன்வைத்தோம். ஆனால் எதிர்தரப்பு எங்களின் நம்பிக்கையை பெறத் தவறி விட்டது. இனி எங்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது அமெரிக்கா தான்’’ என்றார்.
ஈரான் வெளியுறவு அமைச்சகம் விடுத்த செய்தியில், ‘அமெரிக்க தரப்பு அளவுக்கு அதிகமான மற்றும் சட்டவிரோதமான கோரிக்கைகளை முன்வைத்தது. ராஜதந்திர செயல்முறையின் வெற்றி, மறுதரப்பின் தீவிரத்தன்மை மற்றும் நல்லெண்ணத்தையும், வரம்பு மீறிய, சட்டவிரோத கோரிக்கைகளை தவிர்ப்பதையும் சார்ந்தது’ என குறிப்பிட்டது. ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட பிரச்னைகள் பேச்சுவார்த்தையில் தடைகளை ஏற்படுத்தியதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி கூறினார்.
இதற்கிடையே, ஈரான்-அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து பங்களிக்கும் என அந்நாட்டின் துணைப் பிரதமர் இஷாக் டார் கூறி உள்ளார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை சீர்படுத்த உதவும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் மங்கி உள்ளன. மேலும், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் ராணுவ நடவடிக்கைகளைத் தொடருமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. 2 வார போர் நிறுத்தத்தின் அடுத்த கட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.
மத்தியஸ்தம் செய்ய தயார்: புடின் அறிவிப்பு;
ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியனுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு மத்தியஸ்தம் செய்து உதவ தயாராக இருப்பதாக புடின் தெரிவித்ததாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் முற்றுகை டிரம்ப் புதிய மிரட்டல்:
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘பேச்சுவார்த்தையில் பெரும்பாலான விஷயங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் உண்மையில் மிக முக்கியமான விஷயமான அணு ஆயுதம் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இனி உடனடியாக அமலுக்கு வரும் வகையில், உலகின் தலைசிறந்த அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடும் நடவடிக்கையை தொடங்கும். யாரும் உள்ளே போக முடியாது, வெளியே வர முடியாது. ஒரு கட்டத்தில் அனைவரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள், வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலையை எட்டுவோம். ஆனால் ஈரான் இதை நடக்க அனுமதிக்காமல், அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத அளவுக்கு ஆங்காங்கே கண்ணிவெடிகள் இருப்பதாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்த மிரட்டல்களுக்கு அமெரிக்கா பயப்படாது. சர்வதேச கடல் பகுதியில் ஈரானுக்கு சுங்கம் செலுத்தும் எவருக்கும் பாதுகாப்பான பயணம் கிடைக்காது. சட்டவிரோத சுங்கம் வசூலிப்பை அனுமதிக்க மாட்டோம். அந்த கப்பல்களை நாங்கள் தேடி பிடித்து மடக்குவோம். ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அழிக்கும் பணிகளை நாங்கள் தொடங்குவோம். அதில் எங்கள் மீதோ, கப்பல்கள் மீதோ தாக்குதல் நடத்தும் எந்தவொரு ஈரானியரும் நரகத்திற்கு அனுப்பப்படுவார். ஈரானின் அணுசக்தி லட்சத்தியத்தின் காரணமாக அந்நாடு பலவற்றை இழந்துள்ளது. சரியான நேரத்தில் ஈரானில் எஞ்சியிருக்கும் மிச்சத்தையும் எங்கள் ராணுவம் முழுமையாக முடித்து விடும். முற்றுகை தொடங்கும்’’ என மிரட்டல் விடுத்துள்ளார்.
