×

ஹங்கேரியில் 16 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு

புடாபெஸ்ட்: ஹங்கேரி நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் விக்டர் அர்பன் படுதோல்வி அடைந்ததையடுத்து, பீட்டர் மக்யார் தலைமையிலான திசா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு முதல் 16 ஆண்டுகளாக ஹங்கேரியில் விக்டர் அர்பன் (60) தலைமையிலான பிடெஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. தற்போது அங்கு புதிய ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 97.35 சதவீதம் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகின.

அதன்படி, 199 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், பீட்டர் மக்யார் தலைமையிலான திசா கட்சி 53.6 சதவீத வாக்குகளைப் பெற்று, 138 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. ஆனால், பிரதமர் விக்டர் அர்பனின் பிடெஸ் கட்சி 37.8 சதவீத வாக்குகளுடன் வெறும் 55 இடங்களை மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்தித்தது. வெற்றிக்குப் பிறகு தலைநகர் புடாபெஸ்ட்டில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடையே உரையாற்றிய பீட்டர் மக்யார், ‘ஹங்கேரி மீண்டும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து வலுவான கூட்டணியாகச் செயல்படும்.

ஹங்கேரி மக்களுக்கு வர வேண்டிய ஐரோப்பிய ஒன்றிய நிதியை மீண்டும் பெற்றுத் தருவேன். கடந்த 16 ஆண்டுகளாகப் பதவியில் இருந்த பொம்மைகள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும். குடியரசுத் தலைவர் உடனடியாகப் பதவி விலகி, வெற்றி பெற்றவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். இடைக்கால ஆட்சி மாற்றத்தின் போது ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தால் என்னை அழையுங்கள், எனது செல்போன் எண் உங்களுக்குத் தெரியும்’ என்று கூறினார்.

Tags : Hungary ,Budapest ,Viktor Urban ,Hungarian parliamentary ,Tisa party ,Peter Magyar ,Bidet Party ,Victor Urban ,
× RELATED ஹைதியில் உள்ள பிரபலமான ஒரு மலை உச்சிக்...