ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கி சீனா உதவினால் 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தது உள்ளார். ஈரானுடனான அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்க மீண்டும் கடுமை காட்ட துவங்கி இருக்கிறது.
ஈரானுக்கு அடுத்த சில வாரங்களில் வான் பாதுகாப்பு அமைப்புகளை சீனா அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சிஎன்என் செய்தி அறிக்கை தகவல் தெரிவித்து உள்ளது. இந்த சூழலில் ஈரானுக்கு கப்பலில் போருக்கு தேவையான ஆயுதங்களை வழங்க சீனா தயாராகி வருவதாக வெளியான தகவல் குறித்து ஈரானுக்கு ராணுவ உபகரணங்களை வழங்கும் நாடுகளின் மீது வரி விதிக்கப்படும் என்று அவர் முன்னதாக விடுத்த எச்சரிக்கை, சீனாவுக்கும் பொருந்துமா என்று கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒருவேளை ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க சீனா முயற்சித்தால் அந்த நாட்டிற்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கூறினார். அடுத்த மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் டிரம்ப், ஈரானுக்கு உதவினால் வரி விதிக்கப்படும் ன்று ஒருபக்கம் மிரட்டியுள்ள நிலையில் மறுபக்கம் சீனாவிற்கு ஈரானை விட குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
சீனா தனது கப்பல்களை எங்களிடம் அதாவது வெனிசுலாவிடம் அனுப்பலாம்… எங்களிடம் உற்பத்தித் திறன் மிக அதிகமாக உள்ளது; அநேகமாக நாங்கள் கச்சா எண்ணெயை ஈரானை விடவும் இன்னும் குறைந்த விலைக்கே விற்போம் என்று அவர் கூறினார். சீனா ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்புவதாகக் கூறப்படும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பதைப் போலவே, அடுத்த மாதம் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, வரி விதிப்பு மிரட்டல்களைச் செயல்படுத்தும் டிரம்பின் நோக்கமும் தெளிவாக இல்லாமல் உள்ளது.
பொதுவாக எப்போதும் ஈரானுக்கு ஆதரவாக மிகவும் உரக்கக் குரல் கொடுக்கும் நாடுகளில் ஒன்றாக சீனா இருந்த போதிலும், பிப்ரவரி 28 அன்று ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் மோதல்கள் தொடங்கியதிலிருந்து, ஈரானுக்கு ராணுவ அல்லது நிதி ரீதியான உதவிகளை சீனா வழங்கியதாக எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானின் முக்கியப் பொருளாதார நட்பு நாடுகளில் ஒன்றாக சீனா இருப்பதால், போர் தொடங்கியதிலிருந்து பாரசீக வளைகுடாவில் உள்ள சீனக் கொடி ஏற்றப்பட்ட எண்ணெய்க் கப்பல்கள், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரு சில நாடுகளின் கப்பல்களில் ஒன்றாக இருந்து வருவதாக தெரிகிறது. எனினும் கூட ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியதிலிருந்து, சீனாவில் பெட்ரோல் விலை சுமார் 11% உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
