×

மதுபோதையில் வாகனம் ஓட்டிய விவகாரம்: மறுவாழ்வு மையத்தில் சேர்ந்த ‘பாப்’ பாடகி; போதை பழக்கத்தில் இருந்து மீள அதிரடி

வென்ச்சுரா: பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கலிபோர்னியாவில் உள்ள மனநல மற்றும் போதைப்பொருள் மீட்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவின் வென்ச்சுரா கவுண்டி பகுதியில் கடந்த மார்ச் 4ம் தேதி வெள்ளை நிற மெர்சிடிஸ் காரில் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (44) அதிவேகமாக சென்றார். அப்போது காரின் பின்விளக்கு உடைந்த நிலையில், சாலை விதிகளை மீறி தாறுமாறாக வாகனத்தை ஓட்டியதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து கலிபோர்னியா நெடுஞ்சாலை போலீசார் அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக வரும் மே 4ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீளவும், மனநலத்தை மேம்படுத்தவும் தானாக முன்வந்து மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அவரது மேலாளர் கேட் ஹட்சன் கூறுகையில், ‘பிரிட்னி ஸ்பியர்ஸ் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறார், இக்கட்டான இந்த நேரத்தில் அவர் தேவையான உதவியையும் ஆதரவையும் நாடியுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். தனது மகன்களான சீன் பிரஸ்டன் (20), ஜெய்டன் ஜேம்ஸ் (19) ஆகியோரின் நலன் கருதியும், நீதிமன்ற விசாரணையில் தனது பொறுப்புணர்வை காட்டவும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

Tags : Ventura ,Britney Spears ,California ,Mercedes ,Ventura County ,California, United States ,
× RELATED போரை நிறுத்த கூறியதால் ஆத்திரம்;...