வாஷிங்டன்: ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா இன்று முதல் தடுத்து நிறுத்த உள்ளதால் உலகளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் உடனான மோதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் பங்குச்சந்தைகளும் சரிவை சந்தித்துள்ளன. இந்த சூழலில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடந்த அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையை ஈரான் ஏற்க மறுத்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‘ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்பதில் கடந்த 30 ஆண்டுகளாக உறுதியாக இருக்கிறேன். அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று நம்புகிறேன். ஒரே நாளில் ஈரானை என்னால் நிர்மூலமாக்க முடியும், ஆனால் அதை செய்ய நான் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக செல்லும் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கு அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா இன்று முதல் தடுத்து நிறுத்த உள்ளது. இது குறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில், ‘உலக நாடுகளை மிரட்டி கப்பல்களிடம் ஈரான் சட்டவிரோதமாக சுங்கம் வசூலித்து வருகிறது. சர்வதேச கடல் பகுதியில் ஈரானுக்கு பணம் செலுத்தும் எந்தவொரு கப்பலையும் அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்த வேண்டும். ஈரானால் வைக்கப்பட்ட கடல் கண்ணிவெடிகளை அகற்றி, வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை உருவாக்க வேண்டும். அமெரிக்க படைகள் மீதோ அல்லது அமைதியாக செல்லும் கப்பல்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தினால் அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள். எனவே ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக தூய்மைப்படுத்த போகிறோம். ஈரான் தனது ஆதரவு நாடுகளுக்கு எண்ணெய் விற்று பணம் சம்பாதிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மற்ற நாடுகளின் கப்பல்கள் அங்கு செல்வதை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவோம்’ என்று தெரிவித்தார்.
இதனிடையே, இந்திய நேரப்படி இன்று மாலை முதல் இந்த கப்பல் தடுப்பு நடவடிக்கையை அமெரிக்காவின் சென்ட்காம் படைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றன. ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து நாடுகளின் கப்பல்களும் தடுத்து நிறுத்தப்படும் என்றும், அதே சமயம் ஈரானிய எல்லைக்கு உட்படாத பிற துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களுக்கு தடை இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கடந்த புதன்கிழமை போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட சில மணிநேரங்களிலேயே, பெய்ரூட் நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 குழந்தைகள் உட்பட 300 பேர் கொல்லப்பட்டனர். இதனை ‘மரண வேட்டை’ என்று லெபனான் அதிபர் ஜோசப் அவூன் விமர்சித்துள்ளார். தற்போது லெபனானில் உள்ள தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா இலக்குகளை அழிக்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், ‘இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மோதல் என்பது ஒரு தனிப்பட்ட போர்’ என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் முடிவுக்கு பதிலடியாக, ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அமெரிக்க கப்பல்கள் நெருங்கினால் கடும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரித்து
உள்ளது.
இந்தியாவுக்கு ஈரான் பிரதிநிதி உருக்கமான நன்றி
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்தியா காட்டிய ஆதரவு மற்றும் ஒற்றுமைக்காக அந்நாட்டின் பிரதிநிதி உருக்கமான நன்றியை தெரிவித்துள்ளார். மறைந்த தலைவரின் 40வது நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ஈரான் கலாசார மையத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ஈரானின் இந்தியப் பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி பேசுகையில், ‘நீதிக்காகவும் மனிதநேயத்திற்காகவும் வாழ்ந்த ஒரு தலைவர் மறைந்து 40 நாட்கள் ஆகிவிட்டது. இன்று அவரது நினைவை போற்றுவதற்காக மட்டுமல்லாமல், இந்திய அரசுக்கும், விசுவாசமான இந்திய மக்களுக்கும் எங்களது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்திய மக்கள் காட்டிய நேர்மை மற்றும் நீதி மீதான அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். உண்மைக்கு எல்லைகள் இல்லை என்பதையும், விழிப்புணர்வு கொண்ட இதயங்கள் எப்போதும் நீதியின் பக்கம் நிற்கும் என்பதையும் இந்திய மக்களின் இரங்கல் செய்திகள் நிரூபித்துள்ளன’ என்று அவர் உருக்கமாக கூறினார்.
இந்தியாவுக்கு பொருளாதார நெருக்கடி அபாயம்
ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களையும் அமெரிக்காவின் சென்ட்காம் தலைமையிலான கடற்படை தடுத்து நிறுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிற்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 முதல் 120 டாலர் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு 10 டாலர் உயரும் போதும், இந்தியாவில் பணவீக்கம் 0.2 சதவீதம் அதிகரிக்கும் என்பதால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக உயரக்கூடும். மேலும், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 40 சதவீத உரங்களை இந்தியா இறக்குமதி செய்வதால் விவசாயமும் பாதிக்கப்படலாம். இந்தியாவின் நீண்டகால திட்டமான ஈரான் நாட்டின் சபஹார் துறைமுக வர்த்தகமும் இந்த முற்றுகையால் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருவதால், அங்கு போர் மூண்டால் அவர்களை மீட்கும் சவாலும் ஒன்றிய அரசுக்கு எழுந்துள்ளது. தற்போது ஓமன் வளைகுடா பகுதியில் செல்லும் இந்திய கப்பல்களுக்கு மிக உயர்ந்தபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
